சிசுக்களை விற்பனை செய்யும் மோசடி அம்பலம் - வைத்தியசாலை ஊழியர் சிக்கினார்
கண்டி வைத்தியசாலையில் பணியாற்றும் சிற்றூழியர் ஒருவர் பச்சிளம் குழந்தைகளை விற்பனை செய்யும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரின் இந்த வியாபார நடவடிக்கையை சிறுவர் பாதுகாப்பு திணைக்களம் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு சிசுக்கள் மறைத்து வைப்பு
நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களம் நாவுல காவல்துறையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவரின் இந்த மோசடியான செயற்பாடு கண்டுபிடிக்கப்பட்டது.

காலி மற்றும் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இரண்டு குடும்பங்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில் இவரின் வீட்டில் இரண்டு மாத கைக்குழந்தைகள் இரண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவைப் பெற்று
கண்டி நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களம் நீதிமன்ற உத்தரவைப் பெற்று இரண்டு சிசுக்களையும் சிறுவர் இல்லத்தில் ஒப்படைத்ததாகவும் இந்த குழந்தைகளின் தாய் ஒருவர் தெல்தெனிய பிரதேசத்திலும் மற்றையவர் நிகவெரட்டியிலும் வசிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
