திருகோணமலை விவகாரம்: தலைமறைவாகியுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர், நீதிமன்றம் அழைப்பாணை!
திருகோணமலையில் ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விகாரையில் புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலாங்கொட கஸ்ஸப தேரரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கஸ்ஸப தேரரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு திருகோணமலை நீதவான் எம்.என்.எம். சன்சுதீன், இன்று (24.11.2025) நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.
திருகோணமலையில் ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விகாரைக்குச் சொந்தமான காணியில் புத்தர் சிலையை நிறுவச் சென்றபோது நடைபெற்ற குழப்பமான சூழல் தொடர்பாக காவல்துறையினரிடம் வாக்குமூலம் வழங்க மறுத்ததால், இது தொடர்பில் காவல்துறையினர் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்திருந்தனர்.
பி அறிக்கை
நீதிமன்றத்தில் பி அறிக்கையை சமர்ப்பித்த திருகோணமலை காவல்துறையினர் 16 ஆம் திகதி ஏற்பட்ட குழப்பத்தின் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரரிடம் வாக்குமூலம் பெற முயற்சித்ததாகவும், ஆனால் அவர் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, இலங்கை தண்டனைச் சட்டத்தின் பிரிவு 184 இன் கீழ் இது தண்டனைக்குரிய குற்றம் என்றும், விசாரணைகளுக்கு ஒத்துழைப்பது அனைத்து குடிமக்களின் கடமை என்றும் காவல்துறையினர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் ஒரு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைக்காததால் தேரருக்கு எதிராக அழைப்பாணை அனுப்புமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், பலாங்கொட கஸ்ஸப தேரரின் தற்போதைய வதிவிடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதால்,தேரர் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசி இலக்கத்திற்கான பகுப்பாய்வு அறிக்கையை வழங்குமாறு தனியார் தொலைபேசி நிறுவனத்தின் மேலாளருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |