விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உருவாக்கியது பௌத்த பிக்குகளே...! ஆதங்கத்தை போட்டுடைத்த மைத்திரி
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பிக்குகளே உருவாக்கியதாக சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று (31) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 1956 ஆம் ஆண்டு சுதந்திரக்கட்சியின் ஆட்சியில் சிங்கள மொழி அரசகரும மொழியாக்கப்பட்டது.
இதற்கு வடக்கில் இருந்து எதிர்ப்புகள் வலுத்தன. சர்ச்சைகள் உருவாகின. அதன்பின்னர் தமிழ் மொழியும் அரச மொழியாக்கப்பட்டது.
பண்டா - செல்வா ஒப்பந்தம்
பண்டாரநாயக்கா - செல்வநாயகம் (பண்டா - செல்வா) ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முற்பட்ட போது இன்று போலவே அன்றும் மகா சங்கத்தினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
பண்டாரநாயக்காவின் வீடு சுற்றிவளைக்கப்பட்டது. இறுதியில் குறித்த ஒப்பந்தத்தை பண்டாரநாயக்க கிழித்தெறிந்தார்.
மாறாக பண்டா - செல்வா ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் பிரபாகரன் உருவாக்கி இருக்க மாட்டார் என சுட்டிக்காட்டியுள்ளார்.
