நாட்டில் ஆபத்தான மேம்பாலங்களை புனரமைக்க பிரதான மூலம் வரியை அதிகரிப்பதாகும் : பந்துல குணவர்தன
நாட்டில் 30 ஆபத்தான மேம்பாலங்களையும், 400 பாதுகாப்பற்ற ரயில் கடவைகளையும் புனரமைப்பதற்கான பிரதான மூலம் வரியை அதிகரிப்பதாகும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பம்பலப்பிட்டி ரயில் நிலைய மேம்பாலத்திற்கான தற்காலிக படிக்கட்டுகள் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
கடன் மறுசீரமைப்பு
“எமது நாட்டில் இவ்வாறான 30 ஆபத்தான மேம்பாலங்கள் காணப்படுகின்றன. அவற்றை நிர்மாணிப்பதாயின் 350 மில்லியன் ரூபா தேவைப்படுகின்றது.

ஆபத்தான பாலங்களை நிர்மாணிப்பதற்காக 200 கோடி ரூபாவுக்கும் மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த வருடத்துக்காக வரவு செலவுத்திட்டத்தில் ஆபத்தான நிலையில் உள்ள பாலங்களயினும் நிர்மானிப்பதற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
அரச ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதிய கொடுப்பனவு, நிவாரணங்களை வழங்கும் போது முழு தொகையும் நிறைவடைந்து விடும். எஞ்சிய நிதி யாருடைய அரசாங்கமாக இருந்தாலும் வெளிநாட்டுக்கே செல்லும்.
கடந்த அரசாங்கங்கள் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக அதிக வெளிநாட்டு கடன்களை பெற்றுக்கொண்டுள்ளது.
தற்போது வெளிநாட்டு கடன்கள் கிடைப்பதில்லை. கடன் மறுசீரமைப்பு இடம் பெறும் வரையில் எதனையும் செய்ய முடியாது” என்றார்.