வங்கி ஏ.டி.எம் இயந்திரம் திருட்டு - சாரதியுடன் சிற்றூர்தி மீட்பு
கம்பளை தனியார் வங்கியை கொள்ளையடிப்பதற்காக சந்தேகநபர்கள் வருகைதந்த சிற்றூர்தியை இன்று காலை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
பேராதனையில் கைவிடப்பட்ட நிலையில் குறித்த வாகனம் மீட்கப்பட்டுள்ளது.
அதன் சாரதி, குறித்த சிற்றூர்திக்குள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
9.45 AM
முதலாம் இணைப்பு
கம்பளை - கண்டி வீதியிலுள்ள தனியார் வங்கியொன்றில் இருந்து ஏ.டி.எம் இயந்திரத்தை நான்கு சந்தேக நபர்கள் முற்றாக அகற்றியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று அதிகாலை 12.40 அளவில் இடம்பெற்றுள்ளது.
தங்கள் அடையாளத்தை மறைக்க முகமூடி அணிந்த நான்கு நபர்கள் ஒரு சிற்றூர்தியில் வந்து ஏ.டி.எம் இயந்திரத்தை அகற்றியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கட்டிவைக்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரி
இந்த சம்பவத்துக்கு முன்னதாக, குறித்த சந்தேகநபர்கள் வங்கியில் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு அதிகாரியை கட்டிவைத்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்த பணத்தொகை தொடர்பான தகவல்கள் தெரியவரவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.