பசிலுக்கு தப்பித்து ஓட வேண்டிய நிலை - மொட்டுக்கு பதிலடி கொடுத்த விமல்
தேர்தல் முடிந்த கையோடு அமெரிக்காவுக்கு தப்பித்து ஓட வேண்டிய நிலை பசில் ராஜபக்சவுக்கு ஏற்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
உலங்கு வானூர்தி கூட்டணியை (ஹெலிகொப்டர் கூட்டணி) வீழ்த்துவதற்கான வல்லமை மொட்டுக் கட்சிக்கு கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
விமல் அணியின் ‘உலங்கு வானூர்தி’ ராஜபக்சவின் அரசியல் கோட்டையில் உடைந்து விழும் என 'மொட்டு'க் கட்சியின் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் ஊடக சந்திப்பு ஒன்றில் தெரிவித்திருந்தார்.
பதிலடி
இந்த நிலையில் சாகர காரியவசத்தின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஊடகங்களிடம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், ''உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 'மொட்டு'க் கட்சி படுதோல்வி அடையும்.
எமது சின்னத்தை வீழ்த்துவதற்கான ஏவுகணைகள் தற்போது ராஜபக்சக்களிடம் இல்லை. அவ்வாறு இருந்திருந்தாலும் அவை தற்போது புஷ்வானங்களாகியிருக்கும்.
அமெரிக்காவுக்கு ஓடுவார்
தேர்தல் முடிந்த கையோடு பசில் ராஜபக்ச அமெரிக்காவுக்கு ஓடுவார்.
மொட்டுக் கட்சியைப் பூஜ்ஜிய மட்டத்துக்குக் கொண்டு வந்த ஸ்தாபகர் என்ற நாமத்துடனேயே பசில் ராஜபக்சவுக்கு அமெரிக்கா செல்ல நேரிடும்.''என தெரிவித்திருந்தார்.
