பட்டலந்த வதை முகாம் : கடற்றொழில் அமைச்சர் விடுத்துள்ள வேண்டுகோள்
பட்டலந்த வதை முகாமின் பின்னணியில் இருந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் 1977 முதல் 1994 ஆம் ஆண்டுவரை இந்நாட்டை கொலைக்களமாக்கிய ஐக்கிய தேசியக் கட்சியே பட்டலந்த வதை முகாமின் சூத்திரதாரிகளும் கூட என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
பட்டலந்த வதை முகாம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (10.04.2025) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஜுலை கலவரம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நல்ல வழியில் நாம் அரசியலை முன்னெடுத்து வந்த வேளை 1983ஆம் ஆண்டு எமது கட்சி தடைசெய்யப்பட்டது.
ஜுலை கலவரத்தை அடிப்படையாகக்கொண்டே எமது கட்சிமீது தடை விதிக்கப்பட்டது. அன்று ஏற்பட்ட கறுப்பு ஜுலையென்பது இன்றளவிலும் கறுப்பு புள்ளியாகவே இருந்து வருகின்றது.
தடையை நீக்குமாறு ஜனாதிபதி முதல் பலரிடம் கோரிக்கை விடுத்தோம். பலன் கிட்டவில்லை. இதற்கிடையில் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு எமது உறுப்பினர்களை கொன்றொழித்தனர்.
தண்டனை வழங்கப்படல்
நாட்டை நாசமாக்குகின்ற ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டவேளை, நாடு காட்டிக்கொடுக்கப்பட்ட வேளையில்தான் அதற்கு எதிராகவே 1987 மற்றும் 1989களில் எமது வீரமறவர்கள் வீறுகொண்டெழுந்தனர்.
அவர்கள் கொன்று புதைக்கப்பட்டனர். இவ்வாறு புதைக்கப்பட்டவர்கள் விதைக்கப்பட்டவர்களாக மீண்டெழுந்திருக்கின்றார்கள். உண்மையை ஒருபோதும் மூடிமறைக்க முடியாது. உண்மைகள் தற்போது வெளிவர ஆரம்பித்துள்ளன.
பட்டலந்த வதை முகாம் கொலையாளிகள், சித்திரைவதை செய்தவர்கள், இதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.
வடக்கு மற்றும் மலையக மக்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கெல்லாம் நீதி கிடைக்கப்பட வேண்டும்." என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
