மாடு மேய்க்கச் சென்ற நபர் ஆற்றில் சடலமாக!
கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் ஊரியன்வட்டை ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் இன்று மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.
சடலமாக மீட்கப்பட்டவர் வாகனேரி குளத்துமடுவை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான முருகேசு செல்லத்துரை வயது 55 என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உயிரிழந்த நபர் கடந்த சனிக்கிழமை காலை மாடு மேய்ப்பதற்காக சென்றிருந்தார். அன்று மதியம் தொடக்கம் அவரது கையடக்கத் தொலை பேசிக்கு அழைப்பெடுத்தால் பதில் எதுவும் கிடைக்காத நிலையில் குடும்ப உறவினர்களும் மாட்டின் உரிமையாளரும் வாழைச்சேனை காவல் நிலையத்தில் அன்று மாலையே முறைப்பாடு செய்துள்ளனர்.
இவர் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று மாலை ஊரியன்வட்டை ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவ்விடத்திற்கு சென்ற கோறளைப்பற்று திடீர் மரண விசாரணை அதிகாரி வடிவேல் ரமேஸ் ஆனந்த் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்புமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தல்விடுத்துள்ளார்.
அதனையடுத்து சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை காவல்துறைியனர் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








