விசமிகளால் அடித்து உடைத்துத் தரைமட்டமாக்கப்பட்ட துயிலும் இல்ல மேடை!
மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்ட மேடை உடைக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக தரவை மாவீரர் தின ஏற்பாட்டுக்குழு தலைவர் வி.லவகுமார் தெரிவித்தார்.
இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“அத்துடன் நேற்று நாங்கள் மாவீரர் துயிலும் இல்லத்தில் மேடையொன்றை அமைத்திருந்தோம். இன்று காலை நாங்கள் சென்று பார்த்தபோது குறித்த மேடை விசமிகளினால் உடைக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டிருந்தது.
இடித்து அழிக்கப்பட்ட மேடை
அத்துடன் அங்கிருந்த அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தன. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாமல் இறந்தவர்களுக்கான நினைவேந்தலை செய்யலாம் என்று அறிவித்துள்ள காலத்தில் விசமிகள் இவ்வாறான செயற்பாடுகளை தொடர்ச்சியாக செய்துவருகின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம். எதிர்வரும் 27ஆம் திகதி மாலை 6.05 மணிக்கு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும்.
அந்த நினைவேந்தலில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர், உறவுகள் அனைவரையும் அழைத்து நிற்கின்றோம்.
உங்கள் பிள்ளைகளின் தியாகம், அர்ப்பணிப்பினை நினைவுகூரும் இந்த நாளில் அவர்கள் விதைக்கப்பட்டுள்ள இடத்தில் வந்து நினைவேந்தலை செய்வதற்கு இதுவொரு நல்லதருணமாகும்” எனவும் தெரிவித்துளார்.
பொய்ப்பரப்புரை
இதேவேளை, பிரித்தானியாவினை தளமாக கொண்டு இயங்கும் தமிழர் ஒருங்கிணைப்பு குழு என்ற அமைப்பு ஜேர்மன் நாட்டினால் தரவை மாவீரர் துயிலும் இல்லத்திற்கு நிதிகள் வழங்கப்பட்டுள்ளதாக பொய்யான பரப்புரைகளை முன்னெடுத்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் பெற்றோராகளும் உவுகளும் தொடர்ச்சியாக முழு வீச்சுடன் சிரமதான பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தமது உறவுகளுக்கு நினைவேந்தலை செய்யவேண்டும் என்று ஆர்வத்துடன் செயற்பட்டு வருகின்றனர். இவ்வாறான பணிகள் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் பிரித்தானியாவினை தளமாக கொண்டு இயங்கும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு என்னும் அமைப்பு இரண்டு நாட்களுக்கு முன்பாக தரவை துயிலும் இல்லத்தினை ஜேர்மன் நாடு பொறுப்பெடுத்து நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக செய்தியொன்றை வெளியிட்டிருந்தது.
அவ்வாறான எந்த நிதியும் தரவை துயிலும் இல்லத்திற்கு கிடைக்கவில்லை. ஏற்பாட்டுக்குழுவான நாங்கள் உள்ள நிலையில் அவ்வாறான எந்த நிதியும் கிடைக்கவும் இல்லை நாங்கள் கையாளவுமில்லை.
அது யாருக்கு அனுப்பப்பட்டது என்பது இதுவரையில் எங்களுக்கு தெரியாது. இவ்வாறான பொய்யான பரப்புரைகளை புலம்பெயர் நாடுகளில் முன்னெடுப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம்.
உறவுகளுக்கு அழைப்பு
இன்று என்ன நடைபெறுகின்றதென மக்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போது இவ்வாறான பொய்யான பரப்புரைகள் வரும்போது அவர்கள் நம்புவார்கள்.
பொய்ப்பிரசாரங்களை தயவுசெய்து முன்னெடுக்கவேண்டாம். இவ்வாறான பிரசாரங்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
தரவையில் முன்னெடுக்கப்படும் சிரமதான பணிகள் ஒவ்வொரு மாவீரர் குடும்பமும் இணைந்து புலம்பெயர்ந்துள்ள மாவீரர்களின் சகோதரர்கள், உறவினர்கள் இணைந்து தான் இதனை செய்கின்றனர்.
இங்கு சொல்லப்படுகின்ற தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் ஒரு குண்டூசி அளவுகூட உதவிகள் செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.