இலங்கை அரசு ஆதரவு வழங்காவிடின் பாரிய பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்-ஐ.நா விவகாரம் தொடர்பில் எச்சரிக்கை!
இலங்கையில் இனரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஐக்கிய நாடுகள் சபை செயற்படும் பட்சத்தில் அதற்காக இலங்கை அரசு ஆதரவு வழங்காவிடின் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.
இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன் போது மேலும் தெரிவிக்கையில்,
கடந்த வாரம் சிறைச்சாலையில் நடைபெற்ற சம்பவத்தில் ஈடுபட்ட இராஜாங்க அமைச்சர் அந்த பதவியில் இருந்து இராஜினாமா பண்ணியது மட்டும் அல்லாமல் சட்டரீதியாக நீதிக்கு முரணான செயற்பாடாகும். இந்த விடயம் தொடர்பாக ஏனைய கட்சிக்காரர்களோ அல்லது இலங்கையில் உள்ள ஒரு சாதாரன பிரஜையோ சம்மந்தபட்டிருந்தால் இந்த அரசு நீதிக்கு முன் நிறுத்தியிருக்கும்.
இதனடிப்படையில் இந்த அமைச்சர் கைது செய்யப்பட்டு விசாரணைப்படுத்தப்பட்டு நீதிக்கு முன்நிறுத்தப்பட வேண்டும். அப்படி நிறுத்தினால் தான் இலங்கை அரசு சட்டம் என்கிற இறமையை அமுல்படுத்துகின்றது என்பதற்கு சமனாகும். அப்படி இல்லாத பட்சத்தில் நீதி ஒரு பக்கசார்பாக செயற்படுகின்றதா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருக்கின்றது. ஆகவே இராஜங்க அமைச்சர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.
சர்வதேச ரீதியான மனித உரிமை அமைப்புக்கள் மனித உரிமைகள் ஆணைக்குழு போன்றவை இலங்கை தொடர்பான விடயத்தில் கடந்த வாரம் ஒரு தெளிவான அறிக்கையை விடுத்திருந்தது. இதில் தமிழ் மக்களை பொறுத்தவரையில் இனரீதியாக தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றார்கள் என்ற செய்தியை சர்வதேசத்துக்கு அறிக்கையூடாகவும் கடந்தகாலத்தில் முன்வைத்து இருந்தனர். சர்வதேச ரீதியான மனித உரிமை அமைப்புக்கள் கடந்த காலத்தில் சிறப்பாக செயற்பட்டு இருக்கின்றது.
இலங்கையில் பயங்கரவாதத்தாலும் மனித உரிமை மீறலாலும் பாதிக்கப்பட்ட பல மனிதர்கள் புலம்பெயர்ந்த வேளையில் 25 நாடுகள் தமிழர்களுக்கு புகழிடம் கொடுத்தது. சர்வதேசத்தின் மனித உரிமை ஆணையகத்திற்கான வெற்றி செயற்பாடாகும். தமிழர்களை பெறுத்தவரையில் இலங்கையில் இனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதை அரசியவாதிகளும் சமூக ஆர்வலர்களும் அறிக்கை மூலமாக ஐ.நாவில் தெரிவித்துள்ளனர்.
அது தொடர்பாக ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது தான் அனைவரினதும் கோரிக்கையாக உள்ளது. இதற்கு இலங்கை அரசு ஆதரவு அளிக்காதபட்சத்தில் பாரிய பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.