பஸில் தவறுகளை திருத்தி மக்களுக்கு சேவை செய்யவில்லையென்றால் பழைய நிலை தான் ஏற்படும் - ஸ்ரீநேசன் சுட்டிக்காட்டு
அரசின் கொண்டாட்டங்களின் போது கிருமி தொற்றாது மக்களின் திட்டங்களை வெளிப்படுத்தும் போது இந்த கிருமி தொற்றுகின்றது. இது ஒரு அரசியல் வைரஷாகத் தான் இருக்கின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
இன்று மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ,
மதகுருமார்கள் கைது செய்யப்படுகிறார்கள். ஆனால் பதாதைகளை வைத்து கொண்டாட்டங்கள் நடத்துபவர்களை கைது செய்வதில்லை. ஆகவே இது ஒரு அரசியல் மயமாக்கப்பட்ட வைரஸாகத் தான் இருக்கின்றது. இலங்கையை பொறுத்தவரை இந்த வைரஸை வைத்து நடத்துகின்ற அரசியலை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
பஸில் ராஜபக்ஷ தனது தவறுகளை திருத்தி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் அப்படி இல்லை என்றால் பழைய நிலவரம் தான் வரும் என்பதை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பசில் ராஜபக்ஷ முன்பும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்தவர் முன்னணியான பல பல செயல்களுக்கும் தலைமை தாங்கி இருந்தவர்.
அந்த நேரத்தில் கூட அவர் அப்படி செய்தாரா இல்லையா என்பதற்கு அப்பால் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் நீதிமன்ற வழக்குகள் இருந்தது. கடந்த காலத்தில் அவர்கள் என்ன செய்திருக்கின்றார்கள் என்பதை வைத்துக் கொண்டு தான் தற்போது இந்த காலத்தில் என்ன செய்வார்கள் என்பதைப் பார்க்க முடியும்.
கடந்த காலங்களில் செய்த தவறுகளை நிவர்த்தி செய்து ஒரு நியாயமான அடிப்படையில் அவரது சேவை அமையுமாக இருந்தால் மக்கள் ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இருக்கின்றார்கள். அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்கின்றவர்கள் அனைவரும் கொரோனா தொற்று என்ற அடிப்படையில் கைது செய்யப்படுகிறார்கள்.
தனிமைப்படுத்தப்படுகின்றார்கள் அதேநேரத்தில் அமைச்சர் பதவி ஏற்பதை ஏற்பாடு செய்பவர்களுக்கு கைது இடம்பெறுவதில்லை இலங்கையில் பல்வேறுபட்ட வைரஸ் இருக்கின்றது. அதிலும் இலங்கையில் ஒரு வித்தியாசமான அரசியல் வைரஸ் ஒன்று இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார் .