பதவி விலகிய பிசிசிஐ தலைவர் - இந்திய அணி தொடர்பில் எழுந்த புதிய சர்ச்சை
இந்திய துடுப்பாட்ட அணியின் தேர்வுக்குழு (BCCI)தலைவர் சேட்டன் சர்மா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
சேட்டன் சர்மா அவருடைய இராஜினாமா கடிதத்தை இந்திய துடுப்பாட்ட சபையின் செயலாளர் ஜெய் ஷாவிடம் கையளித்துள்ளதாகவும், குறித்த இராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் துடுப்பாட்ட சபையின் தகவல்கள் தெரிவித்துள்ளன.
T20 உலகக்கிண்ணத்தின் அரையிறுதியில் இந்திய அணி தோல்வியடைந்த பின்னர், தேர்வுக்குழு முழுமையாக கலைக்கப்பட்டது. எனினும் குறித்த தேர்வுக்குழுவின் தலைவராக இருந்த சேட்டன் சர்மா மீண்டும் ஜனவரி மாதத்தில் நியமிக்கப்பட்ட புதிய தேர்வுக்குழு தலைவராகவும் பெயரிடப்பட்டார்.
புதிய தேர்வுக்குழு தலைவர்
இவ்வாறான நிலையில் சேட்டன் சர்மா இந்திய துடுப்பாட்ட அணி மற்றும் துடுப்பாட்ட சபையின் சில உள்ளக தகவல்களை வெளிப்படுத்தியிருந்த நிலையில், இந்திய ஊடகம் ஒன்று மறைமுகமாக அதனை பதிவுசெய்து வெளியிட்டிருந்தது.
வெளியிடப்பட்ட காணொளியில் விராட் கோஹ்லி மற்றும் சௌரவ் கங்குலிக்கு இடையிலான முரண்பாடு, இந்திய வீரர்கள் உடற்தகுதிக்காக ஊசிகளை பயன்படுத்துவது, ஜஸ்ப்ரிட் பும்ராவின் உபாதை போன்ற பல விடயங்களை தொடர்பில் வெளிப்படுத்தியிருந்தார்.
குறித்த இந்த விடயங்களானது இந்திய துடுப்பாட்ட சபை தொடர்பில் பல விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில், தன்னுடைய பதவியிலிருந்து விலகுவதாக சேட்டன் சர்மா அறிவித்துள்ளார்.
சேட்டன் சர்மா தேர்வுக்குழு தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ள நிலையில், புதிய தேர்வுக்குழு தலைவரை இந்திய துடுப்பாட்ட சபை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா
