ஓய்வுக்காலத்தைக் கழிக்க உலகில் சிறந்த நாடு : இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்
2026 ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற பின்னர் வாழ்வதற்கு உலகின் மிகவும் மலிவான மற்றும் வசதியான நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புகழ்பெற்ற சர்வதேச பயண சஞ்சிகையான Travel + Leisure இந்தத் தரவரிசையை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக பல முதியவர்கள் தமது ஓய்வுக்காலத்தைத் தள்ளிப்போட்டு வரும் நிலையில், இலங்கையின் இந்த அங்கீகாரம் சர்வதேச ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
தங்குமிட வசதிகள்
அந்தவகையில் ஒரு தம்பதி மாதம் சுமார் 2,200 அமெரிக்க டொலர் செலவில் தங்குமிடம், உணவு, போக்குவரத்து, மருத்துவம் மற்றும் பொழுதுபோக்கு என அனைத்து வசதிகளுடன் சௌகரியமாக வாழ முடியும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடற்கரையோர வில்லாக்கள் மாதம் 400 டொலருக்கும் குறைவான வாடகையில் கிடைக்கின்றன. மின்சாரம் உள்ளிட்ட ஏனைய கட்டணங்களும் மிகக் குறைவு. உள்ளூர் சந்தைகளில் புதிய மீன் மற்றும் காய்கறிகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இருவருக்கான உயர்தர மூன்று நேர உணவு சுமார் 50 டொலர் செலவில் அமையும்.
நீண்ட தூர தொடருந்து பயணம் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வசதிகள் ஒரு சில டொலர்களிலேயே சாத்தியமாகின்றன. கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைகள் நவீன வசதிகள் மற்றும் நம்பகமான மருத்துவ சேவைகளை வழங்குகின்றன.
ஓய்வுக்கால விசா
அத்துடன், ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் ஓய்வுக்கால விசா பெறுவது மிகவும் எளிதானது மற்றும் மலிவானது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையைத் தொடர்ந்து வியட்நாம், தாய்லாந்து, பாலி (இந்தோனேசியா) மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் 2026 ஆம் ஆண்டிற்கான மலிவான ஓய்வுக்கால இடங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் கவலையடைந்துள்ள சர்வதேச முதியவர்களுக்கு, தரம் குறைந்த வாழ்க்கை முறையைத் தெரிவு செய்யாமல், குறைந்த செலவில் நிறைவான வாழ்க்கையை வாழ இலங்கை சிறந்த இடமாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |