கைது செய்யப்படுவாரா சவேந்திர சில்வா - சிஐடி விசாரணைக்கு பரிந்துரை
கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலிமுகத்திடல் போராட்டத் தளத்திற்குள் நுழைந்த சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டதற்கு பின்னர், அமைச்சர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் சேதப்படுத்தப்படுவதைத் தடுக்க முப்படைகளின் பாதுகாப்புப் பிரதானி சவேந்திர சில்வா உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்களினால் பிரதிவாதிகளுக்கு எதிராக உரிய விசாரணை நடத்துமாறு கோரி அமைச்சர் பந்துல குணவர்தன, கோகிலா குணவர்தன, காமினி லொக்குகே உள்ளிட்ட 39 பேர் தாக்கல் செய்த மனுவை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (24) உத்தரவிட்டுள்ளது.
கோட்டாபய நியமித்த விசாரணை குழு
மே 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நாடு முழுவதும் அரசியல்வாதிகள் மற்றும் ஏனையோரின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்பட்டமை புலனாய்வுப் பற்றாக்குறையால் இடம்பெற்றதா என்பதை ஆராய்ந்து அறிக்கையிட முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட தலைமையிலான மூவரடங்கிய குழு பாதுகாப்புப் படையினர் மற்றும் அரச புலனாய்வு அமைப்புகளின் பரிந்துரை அறிக்கையின் நகல் நேற்று (24ம் திகதி) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
காவல்துறை விசேட அதிரடிப்படை மற்றும் முப்படைகளின் பயிற்றப்பட்ட பாதுகாப்புப் படையினரை வரவழைத்து இவ்வாறான தாக்குதல்களை தடுப்பதற்கு பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியாகவும் முப்படைகளின் தளபதியாகவும் கடமையாற்றிய சவேந்திர சில்வா போதுமான பங்களிப்பை வழங்கவில்லை.
சவேந்திர சில்வாவிற்கு எதிராக விசாரணை
எனவே, அவருக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், அந்தக் குழுவின் அறிக்கையை, வசந்த கரன்னகொட சார்பில் ஆஜரான அதிபர் சட்டத்தரணி உதித ஒலஹேவா நீதிமன்றில் சமர்ப்பித்து பரிந்துரை செய்துள்ளதாகவும் நீதிமன்றில் தெரியவந்துள்ளது.
வழக்கு விசாரணைக்கு முந்தைய நாள் வெளியிடப்பட்ட நோட்டீஸின் படி, வழக்கில் அனைத்து பிரதிவாதிகள் சார்பாக வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச சார்பில் முன்னிலையான அதிபர் சட்டத்தரணி ரொமேஷ்த சில்வா, தமது கட்சிக்காரர் சார்பாக எழுத்துமூலமான ஆட்சேபனைகளையல்ல, எழுத்துமூலமான அறிக்கைகளை நீதிமன்றில் தாக்கல் செய்ய எதிர்பார்ப்பதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
மனுதாரர் தரப்பில் ருக்சான் சேனாதீரவுடன் அதிபர் சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன முன்னிலையாகியிருந்தார்.
