பாரவூர்தி சாரதியின் கவனயீனத்தால் பலியான இளைஞன்! தீவிர சிகிச்சை பிரிவில் தந்தை..!
பசறை பகுதியில் உந்துருளியும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் கலபொட பகுதியை சேர்ந்த 19 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உந்துருளியில் பின்னால் அமர்ந்து பயணித்த குறித்த இளைஞரின் தந்தை (வயது 50) பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம்
மரணித்த 19 வயதுடைய இளைஞரின் சடலம் பசறை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, பசறை பகுதியில் இருந்து மொனராகலை நோக்கி சென்று கொண்டிருந்த பாரவூர்தி ஒன்றுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த பாரவூர்தி வீதியின் நடுவில் நிறுத்தப்பட்டதால், பின்னால் சென்ற பாரவூர்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியை முந்தி செல்ல முற்பட்ட வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் இரண்டு பாரவூர்திகளின் சாரதிகளும் பசறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
சந்தேக நபர்கள் இருவரையும் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
