தமிழர் தாயாக மக்கள் எழுச்சி பேரணி - வவுனியாவில் ஆரம்பம்
அரசாங்கத்தின் தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகள், ஆக்கிரமிப்புக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கில் இருந்து கிழக்கு வரையான பேரணிக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் இன்று பேரணி இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பல்கலைகழக முன்றலிலிருந்து நேற்று ஆரம்பமாகிய பேரணி இரணைமடுவில் இருந்து இன்று முல்லைத்தீவை நோக்கி மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
தமிழர்களின் அடிப்படை உரிமைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பவற்றை வென்றெடுக்கும் நோக்கில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சமூக அமைப்புகள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஒன்றிணைந்து இந்த பேரணியை ஆரம்பித்திருந்தனர்.
பேரணிக்கு ஆதரவு
இந்நிலையில் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இருந்து பேரணி ஆரம்பித்து புதிய பேரூந்து நிலையம் வரை ஊர்வலமாக சென்று அங்கிருந்து இரணைமடுவில் ஆரம்பமாகும் பேரணியில் கலந்து கொள்வதற்காக பேருந்தில் சென்றனர்.
இதன்போது முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் சிவில் அமைப்பு பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.



