இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் : யாழ். கடலில் கறுப்புக் கொடிப் போராட்டம்
இந்திய கடற்றொழிலாளர்களின் தொடர்ச்சியான எல்லைதாண்டிய அத்துமீறல் மீன்பிடி நடவடிக்கைகளைக் கண்டித்து யாழ்ப்பாணம் தீவகப் பகுதி கடற்றொழிலாளர்கள் கடலில் இறங்கி கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிகட்டுவான் இறங்குதுறை கடற்பகுதியில் இன்று (29) படகுகளில் கடலுக்குள் இறங்கிச் சென்ற தீவக கடற்றொழிலாளர்கள், கறுப்புக்கொடிகளை ஏந்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன் ஜனாதிபதிக்கு அவசர நடவடிக்கை கோரி கோரிக்கை மனுவையும் சமர்ப்பித்தனர்.
இந்திய இழுவைப் படகுகளின் சட்டவிரோத அத்துமீறலால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான மீன்பிடி உபகரணங்களும் அழிக்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்கள் குற்றஞ்சாட்டினர்.
ஜனாதிபதிக்கு அனுப்பிய கோரிக்கை மனு
இந்த நிலையில் குறித்த போராட்டகாரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில், நெடுந்தீவு, நயினாதீவு, வேலணை, எழுவைதீவு, அனலைதீவு, யாழ்குடா, பாக்குநீரிணை மற்றும் மன்னார் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த பாரம்பரிய கடற்றொழிலாளர் சமூகங்களாகிய நாங்கள், எங்களது வாழ்வாதாரம், கடல்வளம் மற்றும் நாட்டின் கடல்சார் மரபைப் பாதுகாப்பதற்காக அரசின் உடனடி தலையீட்டை கோருகின்றோம்.
மேலும் பல தசாப்தங்களாக இந்திய இழுவைப் படகுகள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து அடிமடி இழுவை மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றன, இது வெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை மட்டுமன்றி கடலடித் தளங்கள், பவளப் பாறைகள் மற்றும் மீன்களின் இனப்பெருக்கப் பகுதிகளை அழித்து கடல் உயிரினப் பல்வகைமையையும் மீன்வளத்தையும் கடுமையாக பாதிக்கின்றது.

மேலும், இந்த நடவடிக்கைகள் வடக்கின் கடல்சார் பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் இலங்கையின் கடல்வள உரிமைகளுக்கு நேரடியான அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் தொண்டி பகுதிகளைச் சேர்ந்த இந்திய இழுவை மடி விசைப்படகுகள், கடந்த ஜூலை 16 முதல் 18 ஆம் திகதி வரை மூன்று நாட்களில் தீவகத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பாரம்பரிய கடற்றொழிலாளர்களின் ஐந்து கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நண்டு வலைகளை இழுத்தழித்து சேதப்படுத்தியுள்ளன.
இந்தப் பிரச்சினைக்கு தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த அரசுகள் உறுதியான தீர்வை வழங்கத் தவறியுள்ளதால், வடக்கு கடற்றொழிலாளர்களிடையே ஏமாற்றமும் நம்பிக்கையின்மையும் அதிகரித்துள்ளது.
இலங்கை–இந்திய இராஜதந்திர உறவுகளின் பெயரில் வடக்கு மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பலியிடப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. வடக்கின் பாரம்பரிய கடல்சார் வாழ்க்கை மரபு அழிந்துவிட்டால் அது வடக்கு மக்களுக்கு மட்டுமல்லாது முழு இலங்கைக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாக அமையும்.
நீதிக்கான அமைதியான குரல்
கரையோர கடற்றொழிலாளர் சமூகங்கள் நாட்டின் கடல் எல்லைகள், கடல்வளம் மற்றும் கடல்சார் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முக்கியமான சமூகமாக இருந்தபோதிலும் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் கிடைக்க வேண்டிய பாதுகாப்பு தங்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எங்களது போராட்டம் எந்தவொரு நாட்டிற்கோ அல்லது சமூகத்திற்கோ எதிரானதல்ல என்றும், இது கடலை நம்பி வாழும் குடிமக்களின் நீதிக்கான அமைதியான குரல்.
அத்துடன், இலங்கைக் கடற்பரப்பிற்குள் வெளிநாட்டு இழுவைப் படகுகள் மேற்கொள்ளும் சட்டவிரோத அடிமடி இழுவை மீன்பிடியைத் தடுக்கும் வகையில் உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

பாரம்பரிய கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளை பாதுகாக்க வேண்டும், கடல் உயிரினப் பல்வகைமை, மீன்வளம் மற்றும் நீலப் பொருளாதாரத்தை எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்க வேண்டும், வடக்கு மக்களுக்கும் நாட்டின் ஏனைய மக்களைப் போன்று சமமான சட்டப் பாதுகாப்பும் அரசின் கவனமும் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஒரு நாட்டின் இறைமை இராஜதந்திரத்தாலும் ஆயுதப் படைகளாலும் மட்டும் பாதுகாக்கப்படுவதில்லை மக்களின் நம்பிக்கை, மனவுறுதி, பங்கேற்பு மற்றும் நாட்டின் மீதான பற்றுறுதியாலும் அது பாதுகாக்கப்படுகிறது.
வடக்கு இலங்கையின் பாரம்பரிய கடற்றொழிலாளர்களின் சமூகங்கள் அரசின் புறக்கணிப்பால் மறைந்து போக அனுமதிக்காதீர்கள். கடலைப் பாதுகாப்போம். கடலை நம்பி வாழும் மக்களைப் பாதுகாப்போம். நாட்டின் கடல்சார் மரபைப் பாதுகாப்போம்.
மௌனத்தைவிட துணிவையும், தற்காலிக வசதியைவிட நீதியையும், குறுகியகால நலன்களைவிட நாட்டின் நீண்டகால நலன்களையும் தேர்ந்தெடுக்கும் தலைவரை வரலாறு நினைவுகூரும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தி - கஜிந்தன், பிரதீபன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
