யாழ்.போதனா வைத்தியசாலையில் பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல் : விசாரணைகள் தீவிரம்
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குள் கடமையில் இருந்த பெண் பாதுகாப்பு உத்தியோகத்தரை தாக்கி, அதனை காணொளி பதிவு செய்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், யாழ். போதனா வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் (28) மாலை நோய் வாய்ப்பட்ட யுவதியொருவர் குடும்பத்தினரால் அழைத்து வரப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நோய் வாய்ப்பட்ட யுவதியுடன், யுவதியின் தாய் உள்ளிட்ட இரு பெண்களும் மேலும் 5 ஆண்களும் வைத்தியசாலைக்கு வந்திருந்த நிலையில், அவர்களும் அவசர சிகிச்சைப் பிரிவின் வாயில் பகுதியில் குழுமி இருந்துள்ளனர்.
காணொளி பதிவு
அதன்போது அங்கு கடமையில் இருந்த பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர், யுவதியின் தாயாரை தவிர ஏனையோரை அங்கிருந்து செல்லுமாறு பணித்துள்ளார்.

இந்தநிலையில், அங்கிருந்தவர்கள் யுவதியுடன் முரண்பட்டு அதனை தமது தொலைபேசியில் காணொளியாகவும் பதிவு செய்துள்ளனர்.
இதற்கு பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் எதிர்ப்பு தெரிவித்த போது பாதுகாப்பு உத்தியோகத்தரை ஒருவர் பின் பக்கமாக இறுக்கி பிடிக்க மற்றுமொருவர் அவரை தாக்கிவிட்டு அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறையினர் விசாரணை
இது தொடர்பில் தாக்குதலுக்கு இலக்கான பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் வைத்தியசாலை பணிப்பாளருக்கு அறிவித்ததுடன், தனது பாதுகாப்பு சேவை நிறுவனத்திற்கும் அறிவித்த நிலையில், அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய காவல் நிலையத்தில் சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய ஆண்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |