நடுவழியில் நின்ற யாழ். நோக்கிப் பயணித்த தொடருந்து - மக்கள் அவதி
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த விரைவு தொடருந்து, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று பௌர்ணமி தினம் என்பதால், குறித்த தொடருந்தின் அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து இன்று (29) காலை 5.45 மணிக்கு காங்கேசன்துறைக்குப் புறப்பட்ட நகரங்களுக்கிடையேயான விரைவு தொடருந்து, காலை சுமார் 8.00 மணியளவில் வெயாங்கொடை தொடருந்து நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கடும் நெரிசல்
இதையடுத்து, பின்னால் வந்த யாழ் தேவி விரைவு தொடருந்தின் காங்கேசன்துறை தொடருந்தின் பயணிகள் ஏற்றப்பட்டு பயணம் தொடரப்பட்டது.

இதனால், இரு தொடருந்துகளின் பயணிகளும் ஒரே தொடருந்தின் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட தொடருந்து வெயாங்கொடை நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெயாங்கொடை மற்றும் அதனை அடுத்த நிலையங்களில் இருந்து காங்கேசன்துறைக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக காலை 10.30 மணிக்கு வெயாங்கொடையிலிருந்து மாற்று தொடருந்து சேவை இயக்கப்பட்டதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |