நவாலியிலும் மடுவிலும் வீசிய குண்டுகள் தான் ஈஸ்டர் நாளில் வெடித்தன!
ஈஸ்டர் படுகொலை குறித்த உண்மைகளை சனல் 4 தொலைக்காட்சி வெளிப்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு அரசியல் விவாதங்கள் துவங்கியுள்ளன. ஆட்சி மாற்றத்தை நோக்காகக் கொண்டும் அதிகாரத்தை கைப்பற்றும் சூழ்ச்சியாகவும் இத் தாக்குதல் இடம்பெற்றிருக்கிறது. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கை முழுவதையும் அதிரப் பண்ணிய ஈஸ்டர் படுகொலை இடம்பெற்று நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அத் தாக்குதலின் பின்னால் யார் இருந்துள்ளனர்? ஏன் அத் தாக்குதல் நடாத்தப்பட்டது என்பது குறித்தான செய்திகள் சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படத்தில் வெளியாகியுள்ளன.
ஈழத்தை நினைவூட்டிய காட்சி
இப் படுகொலை தொடர்பில் உண்மையான நிலைமையை அறிந்து நீதியை நிலைநாட்ட சர்வதேச விசாரணையை சிங்களத் தலைவர்கள் கோருகின்றனர். அதேவேளை சனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ள கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை போன்ற கிறிஸ்தவ தலைவர்கள், ஈஸ்டர் படுகொலைக்கான நீதியை அவாவி கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சிங்கள தலைவர்களும் சரி, கிறிஸ்தவ மதத் தலைவர்களும் சரி, தமிழர் தாயகத்தில் ஆலயங்கள்மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களை சௌகரியமாக மறந்துவிடுவதுதான் வேதனையும் ஆச்சரியமும் தருகின்ற விடயம்.
உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதல் சம்பந்தமான உண்மையின் கதவுகள் திறக்கப்பட்டிருக்கின்றனவா : சிறிநேசன் சந்தேகம்
உண்மையில் ஈஸ்டர் நாளன்று தென்னிலங்கையில் வீசப்பட்ட குண்டுகள், முன்பொரு காலத்தில் தமிழர் தாயகத்தில் உள்ள தேவாலயங்கள்மீதும் சைவாலயங்கள் மீதும் வீசப்பட்டவை என்பதை சிங்கள தேசம் உணர வேண்டும்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற சமயத்தில் வெளியான புகைப்படங்கள், எமக்கு ஈழத்தில் சிங்கள அரசு தேவாலயங்கள் மீது நடாத்திய இனப்படுகொலைத் தாக்குதலையே நினைவுபடுத்தின. கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தின் வானம் தெரியும் விதமாக இருந்த உருக்குலைந்த கூரைகள் வழியாக நாம் நவாலி சென்பீற்றர் தேவாலயத்தையும் மடு தேவாலயத்தையும் நந்தாவில் அம்மன் கோயிலையும் கண்டோம் என்பது நம் வரலாற்றின் துயராகும்.
சிதறுண்ட நவாலி
வரலாற்றின் எல்லா அரசியல் சார் இனவழிப்புகளின் பின்னாலும் ஒரே கோர எண்ணங்கள்தான் இருக்கின்றன என்பதை வரலாறு இப்போது உணர்த்துகிறது. ஈழ மண்ணிலும் அப்படித்தான் நோக்கம் கருதிய இனவழிப்புகள் முன்னெடுக்கப்பட்டன.

1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒன்பதாம் திகதியன்று, யாழ்ப்பாணம் நவாலி தேவாலயத்தின்மீது நடாத்தப்பட்ட விமானத்தாக்குதலில் 147 பொதுமக்கள் கொன்றழிக்கப்பட்டார்கள். அப்போது சந்திரிக்கா அரசு, விடுதலைப் புலிகளுடன் சமாதான ஒப்பந்தத்தை முறித்துப் போரைத் துவங்கியது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ் நிலப் பகுதிகளை கைப்பற்றும் நோக்கில் பெரும்போர் மூண்டது.
யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் இலங்கை அரச படைகள் முன்னேறிப் பாய்தல் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த காலத்தில் அந்த படை நடவடிக்கை்கு சாதகம் தேடும் பொருட்டே மேற்குறித்த தாக்குதல் நடாத்தப்பட்டது.
அளவெட்டிப் பகுதிகளிலிருந்து தாக்குதல் நடவடிக்கையை இலங்கை அரச படைகள் தொடங்கின. நிலைகுலைந்த மக்கள் இடம்பெயரத் தொடங்கினர். கையில் அகப்பட்டவற்றை எடுத்தபடி, உடுத்த உடையுடன் வெளியேறிய மக்கள் தமது உயிரை பாதுகாக்கும் பொருட்டு தஞ்சம் தேடி அலைந்தனர். வீதியெல்லாம் சனங்கள். கண்ணீரும் துயரமுமாய் எங்கள் மக்கள் அடைக்கலம் தேடி அலைந்த வலிமிகு நாட்கள் அவை.
147 பேர் இனப்படுகொலை
இந்த நிலையில்தான் இடம்பெயர்ந்து வந்த மக்கள் நவாலி சென் பீற்றர்ஸ் ஆலயத்திலும் நவாலி சின்னக் கதிர்காமம் முருகன் ஆலயத்தில் தங்கி இளைப்பாறி தாகம் தீர்த்தவேளையில்தான் மாலை 5.45 மணியளவில் கொடிய புக்கார குண்டு வீச்சு விமானங்கள் நவாலிசென்பீற்றர் ஆலயத்தில் குண்டுகளை வாரிக் கொட்டின. யாழ் நகரத்திலிருந்து அராலி நோக்கி வந்த விமானங்கள் 13 குண்டுகளை அந்த ஆலயத்தின்மீது கொட்டி வெறி தீர்த்தன.

இந்த இனப்படுகொலைத் தாக்குதலில் 147 பொதுமக்கள் அழிக்கப்பட்டார்கள். சுமார் 360க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். வயோதிபர்கள், குழந்தைகள், பெண்கள் என்று ஆலய வாசல்களிலும் முற்றங்களிலும் மக்கள் கொன்று வீசப்பட்ட அந்தக் காட்சிகளை தமிழ் மக்களின் மனங்களிலிருந்து என்றும் அழிக்க முடியாது. உயிரைக் காக்க அடைக்கலம் தேடி வந்த மக்கள், கையின்றி, காலின்றி, முண்டங்களாக துடித்த காட்சிகளை ஈழத் தமிழ் இனம் ஒருபோதும் மறவாது.
நவாலிக் கிராமமே இலங்கை அரசின் இந்த இனவெறி இனப்படுகொலைத் தாக்குதலால் அதிர்ந்து உருக்குலைந்தது. கிராமம் முழுவதும் தசைத் துண்டுகளும் குருதியும் தெறித்தனவாம். இலங்கை அரசு எமது அரசல்ல என்றும் எமது அரசாக இருந்தால், அது மக்களை கொன்றிராது என்றும் ஈழத் தமிழ் மக்களை உணர வைத்த, ஆழப் படிந்த இனப்படுகொலைகளில் இதுவும் ஒன்றானது.
குருதியில் நனைந்த மடு
இருபத்து நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா நவாலிப்படுகொலைக்கு மன்னிப்புக் கேட்டார். அதன் வாயிலாகவும் நடந்தது இனப்படுகொலை என்பதை அவர் ஏற்றிருப்பதாகவே கொள்ள வேண்டும்.

என்ற போதும் சந்திரிக்காவின் ஆட்சியில் தொடர்ச்சியாக பாடசாலைகள், மருத்துவமனைகள், சைவ ஆலயங்கள்மீது தாக்குதல்கள் நடாத்தப்பட்டு மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். இதேவேளை சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் மடு தேவாலயம் மீதும் இனப்படுகொலை தாக்குதல் இடம்பெற்றது.
மடு தேவாலயம் கிறிஸ்தவர்களும் சைவர்களும் பேதமின்றி வழிபடுகின்ற ஆலயம். அது மாத்திரமல்ல, அங்கே சிங்கள மக்களும் காலம் காலமாக வழிபாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள். போர்க்காலத்தில் உயிரை காக்கும் ஒரு பதுங்கு இடமாக மடு மாதா தேவாலயம் இருந்திருக்கிறது.
1990களில் நடந்த போர் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து மடுவை அண்டிய பகுதிகளில் அதிகமாக தஞ்சம் இருந்தார்கள். மார்ச் மாதம் 22 ஆம் திகதி 1999 ஆம் ஆண்டு ரணகோச என்ற ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கையின் மூலம் மன்னார் மடுப் பகுதியை கைப்பற்றும் போரை தொடங்கினர் இலங்கை அரச படைகள். அப்போது இந்த இராணுவ நடவடிக்கைக்கு மன்னார் ஆயர் கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.
ஆலயத்தை அழித்தேனும் வெற்றி
இந்தச் சூழலில், நவம்பர் 20ஆம் திகதி. 1999ஆம் ஆண்டு. மடு மாதா தேவாலயப் பகுதியை கைப்பற்றும் சண்டையை மூர்க்கமாக இலங்கை அரச படைகள் முன்னெடுத்தனர். பாலம்பிட்டி - சின்னப் பண்டிவிரிச்சான் காடுகளின் ஊடாக மடுநோக்கி போர் எடுத்தது இலங்கை இராணுவம்.

இந்த நிலையில் பல்லின மக்களுக்கும் அருள் பாலித்து காக்கும் மாதா தம்மையும் காப்பாற்றுவாள் என்று நம்பி தமிழ் மக்கள் மடு மாதா தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தனர். ஆலயத்தில் மக்கள் தஞ்சமடைந்திருப்பதை இராணுவத்தினர் அறிந்திருந்ததுடன், ஆலய மண்டபங்களில் தஞ்சம் புகுமாறும் இராணுவம் அறிவுறுத்தியது. மக்களும் அதனை நம்பி உயிர்காக்க ஆலயத்தில் பதுங்கியிருந்தனர்.
எல்லாப் பிரார்த்தனைகளையும் மீறி, மாதாவின் சிறகுகளை மீறி இராணுவத்தின் எறிகணை இருதய ஆண்டவர் ஆலயம் மீது வீழ்ந்து வெடித்தது. ஆலய மண்டபம் குருதி வெள்ளத்தில் நனைந்தது. உயிரைக் காக்க தஞ்சமடைந்த சனங்கள் கொல்லப்பட்டுக் கிடந்தார்கள். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று முப்பத்தொரு பேர் அவ் இடத்தில் இனக்கொலை செய்யப்பட்டனர்.
13 சிறுவர்கள் உள்ளடங்கலாக எல்லாமாக 44பேர் கொல்லப்பட்டார்கள். அவர்களின் உடல்கள் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மடுவில் விதைக்கப்பட்டது. தொடர்ந்து தாக்குதல்களை இராணுவத்தினர் விரிவுபடுத்தினர். அன்றிரவு மடு தேவாலயப் பகுதியை முழுமையாக இலங்கை அரச படைகள் கைப்பற்றிய நிகழ்வும் நடந்தேறியது. மக்களை கொன்றேனும், ஆலயங்களை அழித்தேனும் வெற்றி பெறுவதே இலங்கை இராணுவத்தின் எண்ணமும் செயல்பாடுமாய் இருந்தது.
நீதி அனைவருக்கும் அமைதி தரும்
அரசியல் வெற்றிகளுக்காக, இராணுவ வெற்றிகளுக்காக தெய்வங்கள் மீதும் இனப்படுகொலை செய்யலாம், ஆலயங்கள் மீதும் இனவெறுப்பு தாக்குதல் மேற்கொள்ளலாம் என்கிற உத்தியை இலங்கை அரசும் அதன் படைகளும் வடக்கு கிழக்கு – தமிழர் தாயகத்தில் அரங்கேற்றின.

பாடசாலைகள் மீதும் மருத்துவமனைகள் மீதும் குண்டுகளை கொட்டலாம் என்கிற மனித குல விரோத எண்ணங்களும் எங்கள் மண்ணில்தான் நிகழ்த்தப்பட்டன. இதே அணுகுமுறையைப் பின்பற்றியே ஆட்சி மாற்ற நோக்கிலும் அதிகாரத்தை கைப்பற்றும் வெறியிலும் ஈஸ்டர் படுகொலைகள், கிறிஸ்தவ ஆலயங்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஆலயங்கள் மீதும் மனித உயிர்கள் மீதும் இலங்கை அரசும் அதன் படைகளும் கரிசனை அல்லது கருணை கொண்டிருந்தால் தமிழர் தாயகத்தில் இத்தகைய அநீதிகள் இடம்பெற்றிராது. அதேவேளை தமிழர்கள்மீது ஏவப்படும் எல்லா இனப்படுகொலை உத்திகளும் ஒருநாள் சிங்கள மக்களை தாக்கும். தமிழர் தாயகம் மீது ஏவப்படும் எல்லா இனப்படுகொலைகளும் ஒருநாள் சிங்கள தேசத்தையும் தாக்கும். ஈஸ்டர் படுகொலையிலும் அதுவே நடந்திருக்கிறது.
உண்மையில் தமிழ் இனம்மீதான அனைத்து இனப்படுகொலைகள், ஒடுக்குமுறைகள்மீதும் வழங்கப்படுகிற நீதி என்பது சிங்கள மக்களுக்கு மாத்திரமின்றி உலகின் அனைத்து மக்களுக்கும் அமைதியையும் பாதுகாப்பையும் அளிக்கும். அதை சிங்கள தேசம் புரிந்துகொள்ளத் துவங்கும் போதுதான் ஈஸ்டர் படுகொலை வரலாறு அனைவருக்குமான நீதியை தரும் சூழல் உருவாகும்.