தாயுடன் நீராடச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி மரணம்
வவுனியா பாவற்குளத்திற்கு தாயுடன் நீராடச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக உளுக்குளம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் உளுக்குளம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரனையில்,நேற்று மாலை வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியில் வசித்து வரும் தாய் ஒருவர் தனது பிள்ளைகளுடன் பாவற்குளம் குளத்திற்கு நீராடச் சென்றுள்ளார். இதன்போது 4 வயது சிறுவனை குளத்தில் நீராட விட்டு தாய் கரைக்கு வந்து திரும்பி குளத்திற்குள் சென்ற போது நீராடிக் கொண்டிருந்த சிறுவனை காணவில்லை.
இதனையடுத்து தாயார் அங்கு நின்றவர்கள் மற்றும் ஊரவரை அழைத்து சிறுவனை தேடிய போது சிறுவன் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டார். உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது சிறுவன் மரணமடைந்துள்ளார்.
வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியைச் சேர்ந்த அம்ஜத் என்ற 4 வயது சிறுவனே மரணமடைந்தவராவார் என உளுக்குளம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வவுனியா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மரணமடைந்த சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி உடலத்தை அடக்கம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.