புலம்பெயர் குடியேறிகளை கட்டுப்படுத்த பிரித்தானியா - பிரான்ஸ் உடன்பாடு
புலம்பெயர் குடியேறிகள் சிறிய படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதைத் தடுக்கும் முயற்சியின் ஒருபகுதியாக விரிவுபடுத்தப்பட்ட உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்காக பிரித்தானிய உள்துறை அமைச்சர் சுயெல்லா பிறேவெமென் பரிஸ் செல்லவுள்ளார்.
இந்த புதுப்பிக்கப்பட்ட உடன்படிக்கையின் ஆண்டு ஒன்றுக்கு மேலதிகமாக 8 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட உடன்படிக்கை
திருத்தப்பட்ட உடன்படிக்கையின் கீழ், பிரான்ஸ் மேற்கொள்ளும் ரோந்துப் பணிகளின் செலவை ஈடுகட்டுவதற்காக செலுத்தும் தொகை ஆண்டுக்கு சுமார் 55 மில்லியன் பவுண்ஸ்சில் இருந்து 63 மில்லியன் பவுண்ஸ்சாக பிரித்தானியாவால் உயர்த்தப்படவுள்ளது.
அந்த வகையில் மக்கள் ஆங்கில கால்வாய் ஊடாக கடப்பதை தடுக்கும் வகையில் பிரான்ஸ் கடற்கரைப் பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளின் எண்ணிக்கை 200 இல் இருந்து 300 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
அத்துடன் பிரான்ஸ் காவல்துறையினரின் கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் கடற்கரைகளை பிரித்தானிய காவல்துறையினர் கண்காணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய வாரங்களாக ஆங்கில கால்வாய் ஊடாக புலம்பெயர் குடியேறிகள் கடக்கும் விடயத்தில் பிரித்தானிய உள்துறை அமைச்சர் பாரிய அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
புலம்பெயர் குடியேறிகள்
இவ்வாண்டு இதுவரையான காலப்பகுதியில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான புலம்பெயர் குடியேறிகள் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு பிரித்தானியாவிற்குள் பிரவேசித்துள்ளனர்.
புதிய விரிவுபடுத்தப்பட்ட உடன்படிக்கையின் கீழ் பிரான்ஸ்சில் செயற்படும் ஆட்கடத்தல்காரர்களின் வலையமைப்பின் செயற்பாடுகளை மட்டுப்படுத்த முடியும் என்ற போதிலும் அதனை முழுமையாக முடிவுக்கு கொண்டுவருவது சாத்தியமற்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவிற்குள் பிரவேசிப்போரின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என பிரதமர் ரிஷி சுனாக் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எனினும் ஒரு விடயம் மாத்திரம் இந்தப் பிரச்சினையை தீர்க்காது எனக் கூறியுள்ள ரிஷி சுனாக், எதிர்வரும் மாதங்களில் பிரான்ஸ்சுடன் இது தொடர்பில் பாரிய ஒத்துழைப்பின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.