பிரித்தானியாவின் புலமைப்பரிசில்! வெளிநாட்டு பெண்களுக்கு மகிழ்ச்சி தகவல்
STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) துறைகளில் பிரித்தானியாவில் உயர் கல்வி பயில விரும்பும் வெளிநாட்டு பெண்களுக்காக, முழுமையான நிதியுதவியுடன் கூடிய புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்களை பிரிட்டிஷ் கவுன்சில் வரவேற்றுள்ளது.
இந்த புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம், பெண்கள் பிரித்தானியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பெறும் வாய்ப்பை பெறுவார்கள்.
இதன்படி, தேர்வு செய்யப்படும் மாணவிகளுக்கு கல்விக் கட்டணம் முழுவதும், அங்கு தங்குவதற்கான செலவுகள், பயணச் செலவுகள் உள்ளிட்ட அனைத்து முக்கியச் செலவுகளும் நிதியுதவியாக வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் இலக்கு
அத்தோடு, கல்விக் காலத்தின்போது தேவையான வழிகாட்டுதல், ஆதரவு மற்றும் தொழில்முனைவு வளர்ச்சிக்கான வாய்ப்புகளும் ஏற்பாடு செய்யப்படும்.

Image Credit: Telegraph India
பெண்கள் STEM துறைகளில் அதிக அளவில் ஈடுபடவும், அவர்களின் அறிவுத் திறன்களை சர்வதேச அளவில் வெளிக்கொணரவும் உதவுவதே இந்த புலமைப்பரிசில் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
குறிப்பாக, கணினி அறிவியல், பொறியியல், சுற்றுச்சூழல் அறிவியல், தரவு அறிவியல், புதிய தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளில் பெண்களின் பங்கேற்பை அதிகரிப்பதே இத்திட்டத்தின் இலக்காக கூறப்படுகிறது.
விண்ணப்பங்கள்
இந்த புலமைப்பரிசில் பெண்களுக்கு சர்வதேச கல்வி அனுபவத்தை வழங்குவதோடு, அவர்களின் தொழில் வளர்ச்சிக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் முக்கிய பங்காற்றும் என பிரிட்டிஷ் கவுன்சில் தெரிவித்துள்ளது.

விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள், பிரிட்டிஷ் கவுன்சிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் முழு விவரங்களை அறிந்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் 2026 மார்ச் மாதம் வரை ஏற்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் பல இந்திய பெண்கள் பிரித்தானியாவில் உயர்கல்வி கற்று, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |