இந்தியாவில் நூலிழையில் தவிர்க்கப்பட்ட பெரும் விமான விபத்து!
இந்தியாவின் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (03) இரவு இரண்டு பயணிகள் விமானங்களின் இறக்கைகள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
புறப்படத் தயாராக இருந்த ஏர் இந்தியா ஏர்பஸ் ஏ320 விமானமும், ஹைதராபாத்தில் இருந்து வந்த இண்டிகோ ஏர்பஸ் ஏ320 விமானமும் ஒன்றையொன்று உரசிக்கொண்டதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இரண்டு விமானங்களும் மிகக் குறைந்த வேகத்தில் பயணித்ததால், ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முறையான விசாரணை
இதனால் விமானத்தின் இறக்கை முனைகள் சிறிய சேதத்தை சந்தித்ததாகவும், இரண்டு விமானங்களிலும் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் எந்த காயமும் இல்லாமல் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் தெரியவருகிறது.

இந்த நிலையில், விமான நிறுவனங்கள் விமானங்களை ரத்து செய்து பயணிகளுக்கு மாற்று நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இதன்போது, விமான நிலைய கட்டுப்பாட்டு மையம் வழங்கிய அறிவுறுத்தல்கள், விமானக் கையாளும் நடைமுறைகள் குறித்து ஆராயப்படும் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |