அரை சொகுசு பேருந்துகள் நீக்கம் - மே மாதம் முதல் புதிய நடைமுறை
எதிர்வரும் மே மாதத்திற்குப் பிறகு அரை சொகுசு பயணிகள் பேருந்து சேவையை முற்றாக நிறுத்துவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அரை சொகுசு பேருந்துகள் குறித்து பயணிகளிடம் இருந்து வரும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர்கள் நாயகம் நிலான் மிரண்டா தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்துவெளியிட்ட அவர், போக்குவரத்து அமைச்சகத்தின் உத்தரவுப்படி, அரை சொகுசு பேருந்து சேவையை சாதாரண சேவை அல்லது சொகுசு சேவையாக மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மே 31 ஆம் திகதிக்குள் மாற்றம்

இந்த தீர்மானம் குறித்து அனைத்து பேருந்து உரிமையாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 430 அரை சொகுசு பேருந்துகள் தற்போது சேவையில் ஈடுபடுகின்றன.
மேலும் இந்த சேவையை சாதாரண அல்லது சொகுசு சேவையாக மாற்ற பேருந்து உரிமையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
அதன்படி, எதிர்வரும் மே 31 ஆம் திகதிக்குள் இந்த மாற்றங்களுக்கான செயல்முறை முடிவடையும் என எதிர்பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தீர்மானம் குறித்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கவலை வெளியிட்டுள்ளார்.