பாதாள உலகிடம் பெற்ற 500 கோடி...! விஜயதாசவின் மகன் உட்பட மூவருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
🛑 புதிய இணைப்பு
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சக்தியின் ஹோரண தொகுதியின் முன்னாள் அமைப்பாளர் சரித் அபேசிங்க மற்றும் இலங்கை விமான நிலையம் மற்றும் வான்வழிச் சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் அருண ஸ்ரீ வருஷஹென்னதிகே ஆகிய மூவருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் இன்று (03-07-2026) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த விளக்கமறியல் காலம் இன்றுடன் நிறைவடைந்ததை அடுத்து அவர்கள் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதவான் இந்த நீடிப்பு உத்தரவைப் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
🛑 முதலாம் இணைப்பு
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சக்தியின் ஹோரண தொகுதியின் முன்னாள் அமைப்பாளர் சரித் அபேசிங்க மற்றும் இலங்கை விமான நிலையம் மற்றும் வான்வழிச் சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் அருண ஸ்ரீ வருஷஹென்னதிகே ஆகிய மூவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (03-07-2026) மூவரும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அண்மையில் கைது செய்யப்பட்ட இவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த விளக்கமறியல் காலம் இன்றுடன் நிறைவடைகின்றது.
திட்டமிட்ட குற்றச்செயல்
இந்த நிலையிலேயே அவர்கள் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான ஹரக் கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தக்கவை பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவுகளிலிருந்து நீக்கி வேறொரு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கி அவரை சாதாரண கைதியாக தடுத்து வைப்பதற்கும் 1,200 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அத்தோடு 2023 மார்ச் மாதத்தில் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச, சரித் அபேசிங்க, மற்றும் சிவில் அருண வருணஹண்டிக ஆகியோர் துபாய்க்குச் சென்றிருந்ததாக இலஞ்ச ஆணைக்குழு தெரிவித்திருந்தது.
எழுத்துப்பூர்வமாக முறைப்பாடு
இந்தநிலையில் இவர்கள் ஒரே விமானத்தில் துபாய்க்குச் சென்று ஹரக் கட்டாவின் மனைவி மதுஷிக மதுவந்தி மற்றும் மிடிகம ருவன் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியைச் சந்தித்ததாகவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்திருந்தது.

இதையடுத்து ஹரக்கட்டாவின் மனைவியிடமிருந்து இலஞ்சத்தைப் பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இது தொடர்பாக ஹரக் கட்டாவின் மனைவி மதுஷானி காவல்துறையினரிடம் எழுத்துப்பூர்வமாக முறைப்பாடு அளித்திருந்ததாகவும் நதுன் சிந்தகா என்ற ஹரக் கட்டாவும் விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
4 நாட்கள் முன்