மக்கள் அடித்து விரட்டினாலும் அதை வாங்கிக் கொண்டு வேலை செய்யுங்கள் -ஜனாதிபதி அறிவுறுத்து
சேதன பசளை விடயத்தில் (கரிம உரம்) மக்கள் திட்டினாலும் அடித்து விரட்டினாலும் அடிவாங்கிக் கொண்டாவது வேலையை செய்ய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு தலைவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர்களுடன் நேற்று 7ம் திகதி மாலை இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இந்த அறிவுரையை வழங்கினார்.
சேதன பசளை கொண்டு தேயிலை பயிர்ச்செய்கையை முன்னெடுக்க முடியும் எனவும் அதற்கு நல்ல விலை இருப்பதாகவும் கூறிய ஜனாதிபதி, அடுத்த போகத்திற்கான விவசாய நடவடிக்கையில் சேதன பசளையை பயன்படுத்த விவசாயிகளை தௌிவுபடுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.
நாட்டு மக்களுக்கு இந்த நல்ல விடயம் குறித்து தௌிவு இல்லை எனவும் அதனால் தௌிவூட்டல் செய்ய வேண்டியது அவசியம் எனவும் அவர் கூறினார். தற்போது நாட்டில் சேதன பசளை உள்ளதாகவும் இது ஒரு நல்ல திட்டம் என்பதால் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதி சேதன பசளை பாவனைக்கு நாம் பழக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.