அரச சார்புநிலைப்பாட்டுக்கு மடை மாற்றப்படும் ஈழத்தமிழர்கள்! தேசமாக திரள சரியான தருணம்?
ஒரு தேசமாக திரளுமாறு பொது அமைப்புகளின் ஒன்றியத்தினால் தமிழ்ச்சமூகத்திற்கான பொது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கிபுல் ஓயாத்திட்டம் என்ற பெயரில் வடக்கில் ஒரு பெரும் சிங்களக்குடியேற்றத்தைக்காவிவர கடந்த கால இனவாத செயற்பாட்டாளர்களின் வரிசையில் தற்போதைய அநுர அரசும் மல்லுக்கட்டிக்கொண்டு நிற்கும் நிலையில் ஈழத்தமிழர்களின் இனப்பரம்பலில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டமிட்ட இச்சதி நடவடிக்கைக்கு எதிராக நாளை வவுனியாவின் நெடுங்கேணியில் பாரிய போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 16 ஆண்டுகளில் ஈழத்தமிழினம் சுக்கு நூறாக சிதைக்கப்பட்டு ஒரு பிரித்தாளும் தந்திரத்திற்குள் அகப்பட்டு தன் தலையில் தன் கைகளாலையே மண் அள்ளிப்போட்டுக்கொண்ட இந்த பேரவலத்தில் இருந்து. மீண்டு வர இதுவே ஒரு சரியான தருணம்.
ஒரு இனமாக ஈழத்தமிழர்கள் மீள் கட்டமைக்கபடவேண்டும் பெருங்கனவை சுமக்கவேண்டும், இத்தனைகால தியாகங்களுக்கு ஒரு பெறுமதி சேர்க்கப்பட வேண்டும் இப்படி அத்தனையும் வெறுங்கனவுகளாக மாறிப்போய்விடக்கூடாது என்பதே இந்த இனத்தை நேசிக்கும் ஒவ்வொருவரின் இப்போதைய பேரவாவாக இருக்கிறது.
ஏன் ஈழத்தமிழர்கள் இப்போது ஒரு தேசமாக திரளவேண்டும் ? அதற்கான காலக்கட்டாயம் என்ன இந்தக்கேள்விகளுக்கு தாயகத்தில் நமது நாளாந்தம் எதிர்கொள்ளும் ஆக்கிரமிப்புகளும் அத்துமீறல்களுமே போதுமானது.
இந்த நாட்டில் இரண்டாம் தர பிரஜைகளாக நாளுக்கு நாள் நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த இனம் மற்றுமொரு பக்கமாக அரச சார்புநிலைப்பாட்டுக்கு மடைமாற்றப்படும் அவலமும் நிகழ்தேறிக்கொண்டிருக்கிறது.
வடக்கு கிழக்கில் இடம்பெறும் சிங்கள பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்புகளை நியாயப்படுத்துபவர்களாக அவர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள்.
நேற்று தமிழர் தேசத்தலைநகரில் பொதுவிளையாட்டு மைதானத்தில் பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்து திருப்திப்பட்டு நிற்கும் பேரினவாதம் மிகமோசமான ஆக்கிரமிப்பையும் இனச்சிதைப்பிற்கும் அடித்தளமிட மீண்டும் கிபுல் ஓயாவை கையிலேந்தியிருக்கிறது.
ஓடாத மானும் போராடாத இனமும் மீள்வது சாத்தியமில்லை என்பார்கள் இந்த இனம் ஈழ நிலப்பரப்பில் நிலைத்திருக்கவேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்கும் ஒரு தீர்க்கமான காலகட்டத்திற்குள் தள்ளப்பட்டிருக்கிறோம்.
இப்போது ஒரு தேசமாக நம்மால் திரளமுடியவில்லை என்றால் அது எப்போதும் சாத்தியமில்லாத ஒன்றாக மாறிப்போகலாம் என்ற கவலையும் வெளியிடப்பட்டுள்ளது.
மொறிசியஸில் தமிழ் தெரியாத தமிழர்களைப்போல கதிர்காமத்தில் ,அநுராதபுரத்தில் வாழும் தமிழ்த்தெரியாத தமிழர்களைப்போல வடக்கிலும் உங்கள் சந்ததிகளை தொலைக்கப்போகிறீர்களா?
உயிரிலும் மேலானது நிலம் என்று இந்த நிலத்திற்காக விதையாகிப்போனோரின் தியாகத்தின் விலையை வீணாக்கப்போகிறோமா?
இப்போது நமது நிலத்திற்காக போராடாமல் போனால் எப்போது போராடப்போகிறோம்?போன்ற கேள்விகள் சமூகப்போராளிகளால் தொடர்ந்தும் முன்வைக்கப்படும் நிலையில் நம் நிலத்திற்காக நம் சந்ததிகளுக்காக ஒன்றாகி ஒரு எதிர்ப்பை பதிவு செய்வதே இப்போதைக்கு நம்மாலானது எனவும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை…
3 நாட்கள் முன்