கனடா செல்ல தமிழகத்திற்குள் ஊடுருவிய இலங்கை தமிழர்களிடம் விசாரணை - முக்கிய குற்றவாளிக்கு வலைவீச்சு
இலங்கையில் இருந்து கள்ளத்தோணியில் கனடா செல்ல தமிழகத்திற்குள் ஊடுருவிய இலங்கை தமிழர்கள் மங்களூர்வில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் நால்வரை மங்களூர் தனிப்படை பொலிசார் வேதாளை கடற்கரைக்கு அழைத்து வந்து இன்று விசாரணை செய்தனர்.
மேலும் தமிழகத்திற்குள் ஊடுருவிய இலங்கை தமிழர்களுக்கு தங்க அடைக்கலம் கொடுத்த முக்கிய குற்றவாளி தலைமறைவானதால் அவர் குறித்தும் மங்களூர் தனிப்படைபொலிசார் மரைக்காயர்பட்டிணத்தில் தீவிர விசாரணை நடத்திச் சென்றனர்.
34 இலங்கை தமிழர்கள் சட்டவிரோதமாக கள்ளதோணியில் கனடா செல்வதற்காக கடந்த மாதம் 27ஆம் திகதி புத்தளம் கடற்கரையில் இருந்து புறப்பட்டனர்.
அவர்கள் மறுநாள் அதிகாலை இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அடுத்த வேதாளை கடற்கரையை வந்து சேர்ந்தனர். பின்னர் வேதாளையில் இருந்து மங்களூர் சென்று கடல் வழியாக கனடா நாட்டிற்கு தப்பி செல்ல முயன்ற போது கடந்த 11ஆம் திகதி மங்களூர் பொலிசாரால் 34 இலங்கை தமிழர்களும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.