இலங்கையில் ஏற்பட்டுள்ள அவலம் - மருந்தின்றி மடியவுள்ள புற்றுநோயாளிகள்
பொருளாதார நெருக்கடி
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.இதிலும் குறிப்பாக மக்களின் வாழ்க்கைத் தரம் தாங்க முடியாத அளவிற்கு பாதிப்பை சந்தித்துள்ளது.
நாளாந்தம் அதிகரிக்கும் விண்ணைத் தொடும் விலையேற்றம், பொருட்களுக்கான பற்றாக்குறை மற்றும் தேவையான பொருட்களை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி என பல வழிகளிலும் மக்கள் துன்பத்தை அனுபவிக்கின்றனர்.
இவ்வாறான தாக்கம் சுகாதாரதுறையையும் விட்டு வைக்கவில்லை.பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் வைத்தியர்களே நாட்டைவிட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.அதேபோன்று அரச மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கே பாரியளவில் மருந்து தட்டுப்பாடு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்க விடயம்.
மருந்து தட்டுப்பாடு
குறிப்பாக மார்பக புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் tabzumab தடுப்பூசி உட்பட புற்றுநோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் சுமார் 20 வகையான மருந்துகள் கிடைக்காததால், தொடர் சிகிச்சை நிறுத்தப்பட்டதால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு,கண்டி தேசிய வைத்தியசாலைகள், கராப்பிட்டி,யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலைகள் மற்றும் மஹரகம வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் tabzumab தடுப்பூசி உள்ளிட்ட மருந்துகள் இல்லை என சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1000 மார்பக புற்றுநோய் தடுப்பூசிகளை பெறுவதற்கு கொள்வனவு அனுமதி வழங்கப்பட்ட போதிலும் சுமார் 500 தடுப்பூசிகள் பெறப்பட்டு வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர்கள் சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளனர்.
நோயாளர் பராமரிப்பு சேவை
புற்று நோயாளர்களுக்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்க வேண்டியுள்ள போதிலும், இந்த மருந்துகள் இல்லாததால் நோயாளர் பராமரிப்பு சேவைகள் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹரகம வைத்தியசாலையில் வருடாந்தம் சுமார் 3,000 புற்று நோயாளர்கள் சிகிச்சைக்காக வருவதாகவும், நாளாந்தம் சுமார் 1,000 நோயாளர்கள் உள்நோயாளிகளாகவும் வெளிநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

