'இலங்கையில் கஞ்சா செய்கை' சட்டரீதியாக்குவதற்கான திட்டமிடல்கள் இல்லை என்கிறார் ஆயுர்வேத ஆணையாளர்
இலங்கையில் கஞ்சா பயிர்ச் செய்கையைச் சட்ட ரீதியாக்குவதற்கான எந்தவொரு திட்டமிடல்களும் தற்போது இல்லையென ஆயுர்வேத ஆணையாளர் கலாநிதி எம்.டீ.ஜே.அபேகுணவர்தன (Abegunawardane) தெரிவித்துள்ளார்.
தற்கால மருத்துவத்துக்குத் தேவையான கஞ்சாவுக்குப் பற்றாக்குறை நிலவவில்லை எனவும் அவர் கூறினார்.
கஞ்சாவை ஏற்றுமதிச் செய்கையாக மேற்கொள்வது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே முன்வைத்த சபை ஒத்தி வைப்பு பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், கஞ்சா பயிர்ச் செய்கையை சட்ட ரீதியாக்குவது தொடர்பான அளவுகோல்கள் தயாரிக்கப்பட்டுள்ளனவா? என சர்வதேசத்தை நோக்கி சுதேச மருத்துவம் என்ற தொனிப்பொருளில் காணொளி தொழில்நுட்பத்தினூடான இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ஆயுர்வேத ஆணையாளர், 1961 ஆம் ஆண்டு சுதேச மருத்துவச் சட்டத்தின் கீழ், சுதேச மருந்துவ முறையின் குறிப்பிடத்தக்கதோர் ஔடதமாக கஞ்சாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
அத்துடன், தற்கால மருத்துவத்துக்குத் தேவையான கஞ்சாவுக்குப் பற்றாக்குறை நிலவவில்லை என்றும் சுதேச மருத்துவர்களுக்கான கஞ்சாவை விநியோகிக்கும் போது, ஒரு கலவையாக மாத்திரமே அது விநியோகிக்கப்படுகிறது என்றும் கூறினார்.
மேலும் ஆயுர்வேத மசாஜ் நிலையங்களாகச் செயற்பட்டு வரும் அனைத்து நிலையங்களையும் ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.