மன்னாரில் கைப்பற்றப்பட்ட பலகோடி பெறுமதியான கஞ்சா : சந்தேக நபர்கள் தப்பியோட்டம்
மன்னார் முருங்கன் காவல்துறை பிரிவுக்குட்பட்ட நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் இருந்து பல கோடி ரூபாய் பெறுமதியான ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகள் இன்றைய தினம் புதன்கிழமை (3) காலை மீட்கப்பட்டு முருங்கன் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மன்னார் காவல்துறை விசேட பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் முருங்கன் காவல்துறையினர் மற்றும் கடற்படையினருடன் இணைந்து மன்னார்-நானாட்டான் பிரதான வீதி,நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் இன்று திங்கட்கிழமை(3) காலை விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
25 மூடைகளில் பொதி செய்யப்பட்ட கேரள கஞ்சா மீட்பு
இதன் போது 25 மூடைகளில் பொதி செய்யப்பட்ட 398 சிறிய பொதிகளைக் கொண்ட கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டன.
மீட்கப்பட்ட கேரள கஞ்சா 906 கிலோ கிராம் எடை கொண்டது எனவும் சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகளின் பெறுமதி பல கோடி என தெரிய வருகிறது.மேலதிக விசாரணைகளை முருங்கன் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை மன்னார் வவுனியா பிரதி காவல்துறைமா அதிபர் சாமந்த விஜயசேகர முருங்கன் காவல் நிலையத்திற்கு இன்று புதன்கிழமை (3) காலை விஜயம் செய்து மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளை பார்வையிட்டதோடு,காவல்துறையினர் மற்றும் கடற்படையினருடன் கலந்துரையாடியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



