அமெரிக்க ஆதரவு! பல்கேரியா - சைப்ரஸ் நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை
அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அமெரிக்க இராணுவ விமானங்களை தற்காலிகமாக நிறுத்த அனுமதி வழங்கியுள்ள பல்கேரியா தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி வலியுறுத்தியுள்ளார்.
பல்கேரிய வெளிவிவகார அமைச்சர் வெலிஸ்லாவா பெட்ரோவா-சமோவாவுடன் தொலைபேசியில் பேசிய அராக்சி, பெஸ்மர் விமானப்படைத் தளத்தில் அமெரிக்க இராணுவ விமானங்களை நிறுத்த அனுமதிப்பது, ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்களுக்கு மறைமுக ஆதரவு வழங்குவதாகும் என்றும், இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்தார்.
மேலும், இத்தகைய நடவடிக்கை ஈரான் மற்றும் பல்கேரியா இடையே நீண்டகாலமாக நிலவி வரும் நட்புறவுக்கு முரணானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பலமுறை எச்சரிக்கை
தனது நாட்டுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்காக தங்கள் நிலப்பரப்பை பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகள் "விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என்று ஈரான் ஏற்கனவே பலமுறை எச்சரித்துள்ளது.

இதேவேளை, சைப்ரஸ் வெளிவிவகார அமைச்சர் கான்ஸ்டான்டினோஸ் கொம்போஸுடனும் அப்பாஸ் அராக்சி தொலைபேசியில் கலந்துரையாடினார்.
அப்போது, சைப்ரஸில் உள்ள வெளிநாட்டு இராணுவத் தளங்கள் ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
கடந்த வாரம், பல்கேரியா நாடாளுமன்றம், பெஸ்மர் விமானப்படைத் தளத்தில் அமெரிக்காவின் KC-135வகை எரிபொருள் நிரப்பும் விமானங்கள் எட்டு வரை மற்றும் 250 இராணுவப் பணியாளர்கள் வரை தற்காலிகமாக நிலைநிறுத்துவதற்கு ஒப்புதல் வழங்கியது.
இந்த முடிவு ஈரானின் எதிர்ப்பையும் மீறி எடுக்கப்பட்டது. எனினும், இந்த நடவடிக்கையின் கீழ் தாக்குதல் நோக்கமுடைய ஆயுதங்கள் எதுவும் நிலைநிறுத்தப்படமாட்டாது என்றும், இதனால் பல்கேரியா எந்த இராணுவ நடவடிக்கையிலும் நேரடியாக பங்கேற்கும் தரப்பாக மாறாது என்றும் அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.
சைப்ரஸில், RAF அக்ரோதிரி உள்ளிட்ட இரண்டு பிரித்தானியா இறையாண்மை கொண்ட இராணுவத் தளங்கள் உள்ளன.
ஆளில்லா விமானம் தாக்குதல்
இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானுக்கு எதிராக தாக்குதல்களை ஆரம்பித்த சில நாட்களுக்குப் பிறகு, கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் அக்ரோதிரி விமானப்படைத் தளம் மீது ஈரான் அனுப்பிய ஆளில்லா விமானம் (ட்ரோன்) தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

போரின் ஆரம்ப கட்டத்தில், ஈரானின் ஏவுகணை களஞ்சியங்கள் மற்றும் ஏவுதளங்களுக்கு எதிரான தற்காப்புத் தாக்குதல்களுக்காக பிரித்தானியா இராணுவத் தளங்களை பயன்படுத்த அமெரிக்கா விடுத்த கோரிக்கைக்கு பிரித்தானியா இணக்கம் தெரிவித்திருந்தது.
ஆனால் பின்னர், அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்ட அந்தத் தற்காப்பு ஒப்பந்தத்தின் கீழ் RAF அக்ரோதிரி விமானப்படைத் தளம் பயன்படுத்தப்படமாட்டாது என்று பிரித்தானியா தெளிவுபடுத்தியது.
இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் பதவியேற்ற புதிய பிரித்தானியா பிரதமர் ஆண்டி பர்ன்ஹம், அமெரிக்காவுடனான பரந்தளவிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஏற்பாட்டை தொடர்ந்தார்.
இதையடுத்து, ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு உதவக்கூடாது என்று பிரித்தானியாவை நோக்கி ஈரானின் புரட்சிகரக் காவல்படை (Revolutionary Guards) எச்சரிக்கை விடுத்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |