தமிழர் பகுதியை இந்தியாவுக்கு தாரைவார்க்க முயற்சி
இலங்கையை வெளிநாடுகளுக்கு அரசாங்கம் கூறு போட்டுள்ள நிலையில், வட பகுதியை இந்திய அதானிக் குழுமத்தால் அபிவிருத்தி என்ற பெயரில் கைப்பற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவுச் சங்கம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் என்.எம்.ஆலம் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த அரசாங்கங்கள் நாட்டை கடனாளியாக்கி தங்கள் வயிறை நிரப்பிக் கொண்டுள்ள நிலையில், தற்போதய அரசாங்கம் தன்னையும் நாட்டு மக்களையும் கடனாளியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
அபிவிருத்தி என்ற பெயரில் கைப்பற்றுவதற்கான முயற்சி
“ கடந்த வியாழக்கிழமை இந்தியக் குழு ஒன்று மன்னார் மாவட்டத்தில் அதானி குரூப் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து சென்றிருக்கின்றது.
தற்போது இலங்கைக்கு இந்தியாவின் எரிபொருள் விநியோகம் வழங்கப்படாது. ஆனால் இந்தியா தற்போதைய நிலையில் எமக்கு உரிய உதவிகளை வழங்கத் தயாரில்லை. ஆனால் வடபகுதியில் வளங்களை பாவிப்போம் என்பது அவர்களுடைய குறிக்கோளாகக் காணப்படுகிறது.
ஆனால் தற்பொழுது இலங்கையில் உள்ள வளங்களை சரியாக பயன்படுத்த இலங்கை அரசுக்கு தெரியவில்லை. காலத்துக்கு ஏற்றவாறு எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு எடுக்கப்படாமையினால் நாடு வறுமைக் கோட்டுக்குள் தள்ளப்பட்டடிருக்கிறது.
இந்த அரசாங்கம் நாட்டினை கூறு போட்டு ஒவ்வொரு பகுதியாக விற்றிருக்கின்றது. அதானி என்பவர் இந்தியாவில் பாரிய பணம் படைத்த ஒரு பெரிய தொழிலதிபர். அங்கே அவருக்கு நிறைய பிரச்சினைகள்.
வடபகுதியை விற்க போகின்றார்கள்
அதாவது அவரால் முன்னெடுக்கப்பட இருக்கின்ற துறைமுக நகரங்கள் கூட ஒரு பிரச்சினையாக காணப்படுகிறது. அவரைக் கொண்டு வந்து வடபகுதியை விற்க போகின்றார்கள்.
நிச்சயமாக தற்போதுள்ள சூழ்நிலையில் வடபகுதியினை அபிவிருத்தி செய்வதாக கூறி திட்டங்களை நடைமுறைப்படுத்தி இந்தியாவுக்கு வடபகுதியினை விற்க போகின்றார்கள்” என்றார்
