கோட்டாபய தெரிவித்த விடயத்தை அம்பலப்படுத்திய கர்தினால்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஜனாதிபதி கோட்டாபய(gotapaya) தெரிவித்த விடயம் தொடர்பில் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை(Cardinal Malcolm Ranjith )இதுவரை வெளிவராத பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இணையவழி நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கையில் கர்தினால் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,
கண்ணிற்கு புலப்படுகின்ற பயங்கரவாத தாக்குதலுக்கு அப்பால் பலவிடயங்கள் உள்ளன. அரசாங்கம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பயன்படுத்தியது என மீண்டும் அவர் குற்றம்சாட்டினார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்தினால் அது தனது அரசியல் செல்வாக்கை எவ்வாறு பாதிக்கும் என ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்தார் எனவும் மல்கம் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்ததும் அவர் உடனடியாக தனது அமைச்சரவையிலிருந்து அமைச்சர்கள் சிலரை தெரிவு செய்தார்,இது அரசியல் தீர்மானம், என குறிப்பிட்டுள்ள கர்தினால் தனது நலன்களை பாதுகாப்பதற்காக எந்த விடயங்களை தெரிவு செய்து நடைமுறைப்படுத்துவது எதனை நடைமுறைப்படுத்தக்கூடாது என்பதை தீர்மானிப்பதற்காகவே அந்த அரசியல் குழுவை ஜனாதிபதி நியமித்தார் என தெரிவித்துள்ளார்.
அறிக்கை வழங்கப்பட்டு இரண்டு நாள்களின் பின்னர் ஜனாதிபதி என்னை தொடர்புகொண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளஅனைத்து விடயங்களையும் என்னால் நடைமுறைப்படுத்த முடியாது சிலவற்றை நடைமுறைப்படுத்தினால் மக்கள் மத்தியில் நான் செல்வாக்கை இழந்துவிடுவேன் என குறிப்பிட்டார் என கர்தினால் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் தனக்கு அவசியமானதை தெரிவு செய்தமைக்காக ஜனாதிபதியை கடுமையாக சாடியுள்ள கர்தினால், சட்டமா அதிபரும் அரசாங்கத்தின் பணயக்கைதியாக மாற்றப்பட்டார் என்பது வெளிப்படையான விடயம் என குறிப்பிட்டுள்ளார்.