மத்திய வங்கி பிணைமுறி மோசடி! பிரதிவாதிகளுக்கு எதிராக நீதிமன்றின் அதிரடி உத்தரவு
2016 ஆம் ஆண்டு மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கில், பல பிரதிவாதிகளுக்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்வதைத் தடுத்திருந்த கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (01) ரத்து செய்துள்ளது.
2016 மார்ச் மாதம் மத்திய வங்கியால் நடத்தப்பட்ட பிணைமுறி பத்திர வெளியீட்டின் போது அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பெர்பெச்சுவல் டிரெஷரீஸ் நிறுவனம் (Perpetual Treasuries Ltd), இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பலருக்கு எதிராகச் சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
முன்னதாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்துச் சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த பின்னரே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
தடையின்றி விசாரணை
பிரதம நீதிபதி பிரீத்தி பத்மன் சுரசேன மற்றும் நீதிபதிகள் ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபயசேகர ஆகியோரின் உடன்பாட்டுடன், நீதிபதி மஹிந்த சமயவர்தன இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதைத் தொடர்ந்து, பிரதிவாதிகளுக்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைகளை இனி தடையின்றித் தொடர முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |