Jaffna Kings உரிமையாளர் கைது : சிறிலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிவிப்பு
லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் 'ஜப்னா கிங்ஸ்' (Jaffna Kings) அணியின் உரிமையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
அதன்படி, குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணைக்கும், விளையாட்டுகளுடன் தொடர்புடைய தவறுகளைத் தடுப்பதற்கான விசேட விசாரணைப் பிரிவுக்கு அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த கைது நடவடிக்கை தொடர்பில் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி, சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் இன்று (17) பிற்பகல் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று நடைபெறவுள்ள போட்டி
மேலும் அந்த அறிக்கையில், இந்தக் கைது சம்பவம் குறித்து வெளியாகும் செய்திகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், இதற்காகத் எமது நிறுவனம் மற்றும் எல்.பி.எல் ஒழுங்கமைப்புக் குழு ஆகியன அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்கும்.

இப்போட்டித் தொடரின் நேர்மைத்தன்மையையும் கௌரவத்தையும் பாதுகாப்பதற்குத் நாம் கடமைப்பட்டுள்ளதன் காரணமாக, இப்போட்டித் தொடருடன் தொடர்புடைய எந்தவொரு தரப்பினராலும் முன்னெடுக்கப்படும் ஊழல்கள், ஒழுக்கக்கேடான நடத்தைகள் அல்லது முறையற்ற செயல்களை எவ்வகையிலும் அங்கீகரிக்கப் போவதில்லை. எனினும், இந்தச் சம்பவத்தினால் போட்டித் தொடருக்கு எந்தவித தடங்கலும் ஏற்படாது.
இன்று (17) இரவு கொழும்பு எஸ்.எஸ்.சி (SSC) மைதானத்தில் நடைபெறவுள்ள 'காலி கேலன்ட்ஸ் - ஜப்னா கிங்ஸ்' (Galle Gallants - Jaffna Kings) அணிகளுக்கு இடையிலான போட்டி திட்டமிட்டபடி இடம்பெறும்.
ஊழல் ஒழிப்புப் பிரிவு
இப்போட்டித் தொடரை மிக உயர்ந்த ஒழுக்க விழுமியங்கள் மற்றும் நேர்மைத்தன்மையின் தரநிலைகளுக்கு இணங்க நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு, விளையாட்டுகளுடன் தொடர்புடைய தவறுகளைத் தடுப்பதற்கான விசேட விசாரணைப் பிரிவுடன் இணைந்து நெருக்கமாகச் செயற்படவுள்ளது.
மேலும், அதிக வெளிப்படைத்தன்மையுடன் கூடிய, ஊழலற்ற சூழலை உறுதி செய்வதற்காக, இம்முறை போட்டித் தொடர் முழுவதும் சுயாதீன அமைப்பொன்றின் நிபுணர் உதவியைப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |