இலங்கைக்கு கண்டனம் தெரிவிக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது அநீதி! பல்வேறு கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்
இந்திய மத்திய அரசு நடவடிக்கை
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடு விக்க இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் வலிறுத்தி வருகின்றனர்.
கடந்த 3 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புதுச்சேரியைச் சேர்ந்த 12 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கு, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள் ளார்.
இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ, இலங்கைக்கு கண்டனம் தெரிவிக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என தெரிவித்துள்ளார்.
பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தல்
அதேநேரம், கைதான மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, மீனவர்களையும் படகையும் மீட்க காங்கிரஸ் கட்சி சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் வி.நாராயணசாமி குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்குமாறு தமிழக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.