ஆளும்தரப்பு எம்.பியின் குற்றச்சாட்டு - முற்றாக மறுத்தது கோட்டாபயவின் செயலகம் (அறிக்கை இணைப்பு)
ஜனாதிபதி செயலக அதிகாரிகள் அதிகளவான வாகனங்களை பயன்படுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி(Chandima Weerakkody) நேற்று (19) நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து பொய்யானது என அரச தலைவர் செயலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அரச தலைவர் செயலகம் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு.
அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் பல சவால்களுக்கு முகங்கொடுத்து குறைந்தளவிலான வளப்பங்களிப்புடன் பாரிய பங்களிப்பை ஆற்றி வருகின்றார்.
நாடு முழுவதும் செயற்படும் அனைத்து செயற்திட்டங்களையும் உள்ளடக்கி பரந்த அளவிலான பணிகளுக்காக அரசதலைவர் செயலகத்தின் கீழ் உள்ள மொத்த ஊழியர்கள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் உள்ள மொத்த ஊழியர்கள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காகும் (1/3).
எவ்வாறாயினும், நேற்று (19) அரசதலைவர் செயலகத்தின் வாகன பாவனை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தனது உரையில் தெரிவித்த கருத்து தவறானது மற்றும் எவ்வித உண்மை ஆய்வும் இல்லாதது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசதலைவரின்அடிச்சுவடுகளைப் பின்பற்றி அரசதலைவர் செயலகத்தில் எந்தவொரு அதிகாரியும் வாகனப் பேரணிகளைப் பயன்படுத்துவதில்லை என்பதை பொறுப்புடன் கூற வேண்டும். மேலும், பல அலுவலர்கள், தங்கள் தரத்திலான வாகனத்தை எடுத்துச் செல்லாமல், சாதாரண வாகனங்களை, சம்பந்தப்பட்ட அலுவலக நோக்கத்திற்காக பயன்படுத்துகின்றனர்.
எனவே, உண்மைகளை சரியாக ஆராயாமல் சந்திம வீரக்கொடி இவ்வாறான பிழையான தகவல்களை முன்வைத்துள்ளமை மிகவும் வருந்தத்தக்கது என ஜனாதிபதி செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.