கெஹெலியவிற்கு எதிராக எடுக்கப்படவுள்ள அதிரடி நடவடிக்கை
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) உள்ளிட்டோருக்கு அடுத்த வாரம், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பில் குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூன்று பேர் கொண்ட அமர்வு முன், இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் நேற்று (03), உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
பிரதிவாதி
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் பலரை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு மீதான விசாரணையின் போது, சட்டமா அதிபர் சார்பாக முன்னிலையான, துணை மன்றாடியார் நாயகம் நிர்மலன் விக்னேஸ்வரன் இதனை அறிவித்துள்ளார்.
நாட்டில் பதிவு செய்யப்படாத இரண்டு இந்திய நிறுவனங்களிடமிருந்து இந்திய கடன் வரியின் கீழ் மருந்துகளை வாங்கியமைக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் சிறிலங்கா மற்றும் கொள்கை மாற்று மையத்தின் மூத்த ஆராய்ச்சி அதிகாரி லியோனல் குருகே ஆகிய தரப்புகளால், இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
