பல ஆண்டுகளுக்கு பின்னர் ஹரி குடும்பத்தினரைச் சந்தித்த மன்னர் சார்லஸ்!
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ், பல ஆண்டுகளுக்குப் பின் தனது இளைய மகனான ஹரி மற்றும் அவரது குடும்பத்தினரைச் சந்தித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தனது இளைய மகனும் மனைவியும் அரச வாழ்க்கையைத் துறந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்ததிலிருந்து நீடித்து வரும் பிளவைச் சரிசெய்ய முயற்சிக்கும் நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
லண்டனுக்கு மேற்கே உள்ள ஹைகிரோவ் இல்லம் என்ற தனிப்பட்ட இல்லத்தில் ஹரி, மேகன் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளான இளவரசர் ஆர்ச்சி மற்றும் இளவரசி லில்லிபெட் ஆகியோர் மன்னரையும் ராணி கமிலாவையும் சந்தித்ததாக பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியது.
சுய சரிதைப் புத்தகம்
அரச குடும்ப மரபுக்கு மாறாக, விவாகரத்து பெற்ற, நடிகையான ஒரு பெண்ணை ராஜ குடும்பத்துக்குள் கொண்டு வந்த இளவரசர் ஹரி, அதன் தொடர்ச்சியாக உருவான பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் அரச குடும்பத்தையும் பிரித்தானியாவையும் விட்டு வெளியேறினார்.

இந்தநிலையில் அமெரிக்காவில் குடியமர்ந்த ஹரி, மேகன் தம்பதியர் அரச குடும்பத்தைக் குறித்தும், ராணி கமீலா, இளவரசர் வில்லியம், இளவரசி கேட் குறித்தும் மோசமாக விமர்சனங்கள் முன்வைக்க, அவர்களுக்கும் அரச குடும்பத்துக்கும் இடையே பிரிவு ஏற்பட்டது.
ஹரி, தனது சுய சரிதைப் புத்தகமான ‘ஸ்பேர்’ எனும் புத்தகத்தில், தன் பங்குக்கு தன் குடும்பத்தைக் குறித்து மோசமாக எழுதி நிலைமையை மேலும் மோசமாக்கினார்.
ஒருபக்கம் அரச குடும்பத்துக்கும் ஹரி குடும்பத்துக்கும் இடையிலான பிளவு அதிகரித்துக்கொண்டே செல்ல, இன்னொரு பக்கம், ஹரியின் பிள்ளைகளான தனது பேரப்பிளைகளைக் காண ஏங்கினார் மன்னர் சார்லஸ்.
ஹைக்ரோவ் இல்லம்
இந்தநிலையில், ஹரி தனது இன்விக்டஸ் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான ஒரு நிகழ்ச்சிக்காக பிரித்தானியாவிற்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டது.
அப்படி அவர் பிரித்தானியா வரும்போது ஹரியை சந்திப்பது என ஒரு திட்டம் உருவாக, இதை ஒரு வாய்ப்பாக வைத்து தன் பேரப்பிள்ளைகளை சந்திக்க திட்டமிட்டார் சார்லஸ்.

அதன்படி, நேற்று (10) வெள்ளிக்கிழமை மதியம், மன்னரும் ராணி கமீலாவும், ஹரி மேகன் தம்பதியர் மற்றும் அவர்களுடைய பிள்ளைகளான ஆர்ச்சி மற்றும் லிலிபெட்டை சந்தித்துள்ளார்கள்.
இந்த சந்திப்பு ஊடகவியலாளர்கள் காண லண்டனில் நடைபெறவில்லை. மன்னரின் தனிப்பட்ட இல்லமான ஹைக்ரோவ் இல்லம் என்னும் இடத்தில் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இளவரசி டயானாவின் கல்லறை
மன்னர் சார்லஸ், ஹரி குடும்பத்தை சந்திக்க இந்த ஹைக்ரோவ் இல்லத்தை தேர்ந்தெடுக்க பல காரணங்கள் உள்ளன. அதாவது, இது ஒரு தனிப்பட்ட முறையிலான சந்திப்பு. மன்னர் தன் மகன் குடும்பத்தை சந்திக்கிறார் அவ்வளவுதான்.

அதனால், அங்கு ஊடகவியலாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை. ஆகவே, அந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களும் வெளியாகாது. அத்துடன், ஹரியின் இன்விக்டஸ் நிகழ்ச்சி நடக்கும் இடம் பர்மிங்காம். அது ஹைக்ரோவ் இல்லத்திலிருந்து இரண்டு மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ளது.
மன்னரை சந்தித்தபின் ஹரி குடும்பம் இளவரசி டயானாவின் கல்லறையைக் காணச் செல்வதாக திட்டம். ஹைக்ரோவ் இல்லத்திலிருந்து அங்கு செல்ல இரண்டு மணி நேரம் ஆகும்.
அதேபோல, மன்னர் சார்லஸ் நிகழ்ச்சி ஒன்றிற்காக ஆக்ஸ்ஃபோர்ட்ஷையருக்கு வந்திருந்தார், அங்கிருந்து ஹைக்ரோவ் இல்லம் வர ஒரு மணி நேரம் ஆகும். ஆக, எல்லோருக்கும் பயணிக்க வசதியான ஒரு இடமாக ஹைக்ரோவ் இல்லம் அமைந்துவிட்டது.
எல்லாவற்றிற்கும் மேல், சிறு வயதில் இளவரசர்கள் ஹரியும் வில்லியமும் மகிழ்ச்சியுடன் செலவிட்ட வீடு ஹைக்ரோவ் இல்லம் என்பது மேலும் சிறப்பானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |