போராட்டக்காரர்கள் மகிந்தவிற்கு வைத்த ‘செக்’- மனம் திறந்தார் நாமல்
கோட்டாபயவை அதிபர் பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கு முன்னர் பிரதமர் பதவியிலிருந்த மகிந்த ராபக்சவை போராட்டக்காரர்கள் ஏன் முதலில் வெளியேற்றினார்கள் என்பதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச.
முகப்புத்தகத்தில் நடைபெற்ற நேரடிக் கலந்துரையாடல் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்தார்.
“கோ ஹோம் கோட்டா என்று நீங்கள் கூறும்போது பிரதமர், அடுத்ததாக அதிபர் பதவிக்காக வரிசையில் நிற்கிறார். அதனால் தான் கோட்டாபய பதவி விலகும் முன்னர் மஹிந்த பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை தோன்றியது.
தந்திரமாக பதவி விலக்கப்பட்ட மகிந்த

போராட்டத்தை முன்னின்று நடாத்தியவர்கள் கட்சி சார்பற்றவர்கள் இல்லை. கோட்டாபய பதவி விலகும் போது பிரதமராக இருந்த மஹிந்த அடுத்தபடியாக அதிபராவார் என்பதில் அவர்கள் தெளிவாக இருந்தனர். அதனால் தான் அவர்கள் தந்திரமாக முதலில் மஹிந்த ராஜபக்சவை பதவி விலக்கினார்கள்.
ராஜபக்சாக்களை அதிகாரத்திலிருந்து நீக்குவது மூன்றாம் தரப்பின் சதிச் செயல். போராட்டத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு நபரும் மூன்றாம் தரப்பு சதியாளர்களின் கைக்கூலிகள். இதைப் பற்றி மக்கள் பின்னர் விளங்கிக் கொள்வார்கள்.
போராட்டகாரர்கள் மூன்றாம் தரப்பின் கைக்கூலிகள்

"இப்போதும் எங்களுக்கு போராட்டத்தைப் பற்றி எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பிரச்சினை உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட ஒவ்வொருவரும் மூன்றாம் தரப்பின் ஆட்கள் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். போராட்ட காலத்தில் நீங்கள் மூன்றாம் தரப்பின் கைக்கூலியாக இருந்தீர்கள் என்பதை நீங்கள் பின்பு புரிந்து கொள்வீர்கள்" என அவர் மேலும் தெரிவித்தார்.