இன்றுடன் நிறைவுக்கு வரும் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள்
செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியை அகழ்வதற்காக நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட 45 நாட்கள் கால அவகாசம் இன்றுடன் (06) நிறைவடைகின்றது.
அதன்படி, இரண்டாம் கட்ட அகழ்வுப் பணியின் 45வது நாள் இன்றாகும். இந்தநிலையில் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, 45 ஆவது நாளுடன் அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட வேண்டும்.
சித்துப்பாத்தி மனித புதைக்குழி வளாகத்தில், மேலும் என்புக் கூடுகள் காணப்படக் கூடும் என நீதிமன்றத்திற்கு ஏற்கனவே அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் கட்டளை
அதற்கமைய, அகழ்வுக்காக எட்டு வாரங்கள், கால அவகாசம் தேவைப்படுவதாக தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா அறிக்கையிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தின் கட்டளை இன்றைய தினம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, அடுத்த கட்ட அகழ்வு பணிகளுக்கு தேவையான பாதீட்டை தயார் செய்து சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்றைய தினம் 44ஆவது நாளுக்கான அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது.
இதுவரை சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து 240 மனித என்புக்கூடுகள் வெளிப்பட்டிருக்கின்றன. அவற்றில் 235 என்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
