செம்மணி மனிதப்புதைகுழி : பக்கச்சார்பற்ற குற்றவியல் விசாரணைக்கு வலியுறுத்தும் OHCHR
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் சர்வதேச தடயவியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களின் ஒத்துழைப்புடன்கூடிய தரக்கட்டமைப்பைக் கட்டியெழுப்ப வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் இம்மீறல்களை நிகழ்த்துவதற்கான உத்தரவு பிறப்பிக்கும் நிலையில் இருந்தவர்களை அடையாளங்காணல் உள்ளடங்கலாக இதுபற்றிய பக்கச்சார்பற்ற குற்றவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 7 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் இலங்கை தொடர்பிலான எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
உயர்ஸ்தானிகரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை
அதற்கமைய இலங்கை அரசாங்கம் பதிலளிக்கும் வகையில் நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேற்குறித்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
குறித்த அறிக்கையானது 2025 ஒக்டோபர் மாதம் தொடக்கம் 2026 ஜுலை மாதம் வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி சித்துப்பத்தி கூட்டுப் புதைகுழியில், 2026 ஜூலை மாத இறுதியில், குழந்தைகள் உட்பட 477க்கும் மேற்பட்ட நபர்களுக்குரிய எலும்புக்கூடுகள் தோண்டியெடுக்கப்பட்டன.
2025 செப்டம்பரில், செம்மணி கூட்டுப் புதைகுழி விசாரணை குறித்த தனது உண்மை கண்டறியும் அறிக்கையை மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டதுடன், சர்வதேச மனித உரிமைகள் தரங்களுக்கு இணங்க, நம்பகமான, வெளிப்படையான மற்றும் அறிவியல் பூர்வமாக வழிநடத்தப்படும் செயல்முறையை உறுதி செய்வதற்கான பரிந்துரைகளையும் வழங்கியது.
யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம்
மழையின் காரணமாக ஏழு மாத காலத்திற்கு அகழ்வாராய்ச்சிப் பணிகள் இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் வரை, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் 2026 ஏப்ரலில் பணிகளை மீண்டும் தொடங்க உத்தரவிட்டதுடன், தூதரகப் பிரதிநிதிகள் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் அனுமதி வழங்கியது.

இந்த முன்னேற்றம் வரவேற்கத்தக்கது என்றாலும், இந்த முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக, சடலங்களைத் தோண்டி எடுக்கும் பணிகள் மினசோட்டா நெறிமுறை உள்ளிட்ட சர்வதேசத் தரநிலைகளைப் பூர்த்தி செய்வதையும், சாத்தியமான கட்டளைப் பொறுப்பு குறித்த விசாரணைகள் உட்பட பாரபட்சமற்ற குற்றவியல் விசாரணைகள் அவற்றுடன் நடைபெறுவதையும் உறுதிசெய்ய, சர்வதேச தடயவியல் மற்றும் தொழில்நுட்ப ஆதரவை நாடுமாறு இந்த அலுவலகம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.
மேலும், தற்போதுள்ள அனைத்து நீதிமன்ற உத்தரவுகளையும் செயற்படுத்துமாறு இந்த அலுவலகம் பரிந்துரைப்பதுடன், அனைத்து முக்கியத்துவம் வாய்ந்த ஆட்கொணர்வு வழக்குகளையும், குறிப்பாக வலிந்து காணாமல் போகச் செய்தல் உள்ளிட்ட கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளையும் அதிகாரிகள் விரைவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |