செம்மணியில் அடுத்தடுத்து வெளிவரும் சிறுவர்களின் என்புக்கூடுகள்
யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் 24வது நாளாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் நடைபெற்றது.
இன்றையதினம் (14) நடைபெற்ற அகழ்வுப் பணிகளின் போது 07 என்புக் கூடுகள் அகழ்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 02 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி வி.நிரஞ்சன் தெரிவித்தார்.
இவற்றில் 04 என்புக்கூடுகள் சிறுவர்களுடையதும், 02 வளர்ந்தவர்களுடையதும், ஒன்று குழந்தையினதும் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது
அந்தவகையில், இன்றுடன் 355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றுள் 341 என்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளம் இடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

இந்த அகழ்வுப் பணிகளில் கடந்த வாரம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், றுகுணு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்துள்ள நிலையில் இன்றும் சில யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அகழ்வின்போது தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், சட்டத்தரணிகள், துறை சார் நிபுணர்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |