இந்தியாவுக்கு எதிராக கூட்டணி அமைக்கும் சீனா! ஸ்ரீலங்காவும் இணைகின்றது!!
பாகிஸ்தான் தவிர்ந்த இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் பிம்ஸ்ரெக் அமைப்பை இயக்குவதற்கு இந்தியா துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தியாவைத் தவிர்த்து பாகிஸ்தான் இலங்கை போன்ற நாடுகள் அடங்கலாக சீனா தெற்கு நாடுகளின் வறுமை ஒழிப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு மையம் -China-South Asian Countries Poverty Alleviation and Cooperative Development Centre- ஒன்றை சீனா கடந்த செவ்வாய்க்கிழமை உருவாக்கியுள்ளது.
ஆசிய நாடுகளுக்கான வறுமை நிவாரணம் உள்ளிட்ட நிதியுதவிகளை இந்தியா மூலமாகச் செய்வதற்கு கடந்த மாதம் பிரித்தானியாவில் இடம்பெற்ற ஜி 7 மாநாட்டில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தவொரு நிலையில், சீனா எடுத்துள்ள இந்தப் புதிய முயற்சி இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு விவகாரங்களில் அமெரிக்கா இந்தியா மேற்கொண்டுவரும் தந்திரோபாயங்களை முறியடிக்கும் நிலமை உருவாகலாம்.
ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ், பூடான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், சீனா ஆகியவற்றை கொண்ட சார்க் கூட்டமைப்பு 1985 இல் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த நாடுகளில் இந்தியா, பூடான் மற்றும் மாலத்தீவுகளைத் தவிர்த்துவிட்டுச், சீனா மேற்படி புதிய மேம்பாட்டு மையத்தைத் தற்போது உருவாக்கியுள்ளது.
2017 ஆம் ஆண்டின் பின்னர் செயலிழந்த சார்க் நாடுகள் அமைப்பை மீளவும் ஒழுங்காக இயக்க வேண்டுமென விடுக்கப்பட்ட கோரிக்கையைப் புறம்தள்ளிய இந்தியா, பாகிஸ்தான் அங்கம் வகிக்காத பிம்ரெக்ஸ் அமைப்பைப் பலப்படுத்தவே விரும்பியது.
ஐ.ஒ.ஆர்.ஏ எனப்படும் இந்து சமுத்திரத்தைத் தொடுகின்ற கடலின் கரையோரத்தில் உள்ள பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்புக்கான கூட்டு முயற்சி மற்றும் பிம்ரெக்ஸ் ஆகிய இரு அமைப்புகளையும் தூரிதமாகச் செயற்படுத்துவது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த மாதம் 21 ஆம் திகதி அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவுடன் நடத்திய இணையவழி மாநாட்டில் வலியறுத்தியிருந்தார்.
குறிப்பாக வங்காள விரிகுடாவை மையப்படுத்தி பங்களாதேஸ், பூடான், இந்தியா, மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகளைக் கொண்ட, பிம்ஸ்டெக் (The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation- BIMSTEC) அமைப்பை ஊக்குவிப்பதே நோக்கமாக இருந்தது.
இந்தவொரு நிலையில் சீனா உருவாக்கியுள்ள மேற்படி மையத்தில் இலங்கை பிரதான பங்காளியாக மாறலாம்.
கடந்த செவ்வாய்க்கிழமை சோங்கிங் நகரில் உள்ள தென்மேற்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆரம்ப விழாவில் சீனாவிற்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலிதா கோஹோனா பங்கேற்றிருக்கிறார். இலங்கையின் உட் கட்டுமானத்துக்கு சீனாவின் நிதியுதவி அவசியம் என்ற கருத்தை பாலித கோகண்ண தனது உரையில் விபரித்துள்ளார். நிகழ்வில் பாகிஸ்தான், பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள நாடுகளின் தூதுவர்களும் பங்கேற்றனர்.
தெற்காசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்கு ஆதரவளித்தல், உதவியளித்தல், பிராந்தியத்தில் பலத்தைத் திரட்டுதல், வளங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் தந்திரோபாயங்களைப் பரிமாறிக்கொள்வதல் மற்றும் வறுமைக் குறைப்புக்கான காரணத்தை கூட்டாக ஊக்குவித்தல் மேற்படி மையத்தின் பிரதான நோக்கம் என்று சீன வெளியுறவு அமைச்சு கடந்த புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சர் வோன் லீ, கடந்த ஏப்ரல் மாதம் விடுத்த கோரிக்கை அமைவாகவே சீனா தெற்கு நாடுகளின் வறுமை ஒழிப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு மையம் கடந்த செவ்வாய்க்கிழமை உருவாக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக இலங்கை, பாகிஸ்தான், நோபாளம் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளோடு கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியாகச் சீனா உரையாடியிருக்கிறது.
ஆனாலும் ஆனாலும் இந்த மையத்தை எப்போதிருந்து ஆரம்பிப்பது என்ற என்ற தகவலும், அதன் ஆவணங்கள் பற்றிய விபரங்களும் இதுவரை வெளியாகவில்லை.
சீனாவைத் தலைமையாகக் கொண்டு இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான். பாங்களாதேஸ், நேபாள் ஆகிய ஐந்து நாடுகள் இந்த மையத்தின் அங்கத்துவ நாடுகளாக இருக்கும்.
இந்த மையத்தின் நோக்கங்களுக்கு சீனா பிரதான நிதியுதவியாராகவும் வழிகாட்டியாகவும் செயற்படவுள்ளது. பூட்டான், மாலைதீவு நாடுகள் இந்த மையத்தில் இணைக்கப்படவில்லை. ஏனெனில் பூட்டான் சீனாவின் பொருளாதாரத் திட்டங்களை புறக்கணித்துள்ளது. சீனாவுக்கு ஆதரவாக இருந்த மாலைதீவு தற்போது இந்தியாவின் செல்லப்பிள்ளைகியுள்ளது. இதனால் இந்த இரு நாடுகளும் தவிர்க்கப்பட்டுள்ளன.
இந்த மையத்தின் பிரதான செயற்பாட்டுத் திட்டங்கள், தந்திரோபாயங்கள் கொழும்பு, இஸ்லாமபாத் நகரங்களில் நடத்தப்படும் மாநாடுகளில் வகுக்கப்படலாம் என்பதை சீன வெளியுறவு அமைச்சின் அறிக்கையின் உள்ளடக்கத்தில் இருந்து அறிய முடிகின்றது.
இந்த மையத்துக்கான மாநாடு சீனாவில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுக் கொண்டிருந்தபோதே தென் சீன கடல் பிரதேசத்தைச் சீனா உரிமை கோர முடியாதென அமெரிக்க வெளியுறவு அமைச்சர், அன்டனி பிளின் கென் எச்சரிக்கை விடுத்தார். சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, பிலிப்பைன்ஸ் மீது தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா இராணுவத்தைக் களமிறக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.
தென் சீனக் கடல் எல்லை தொடர்பான வழக்கில், பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு ஆதரவாக, சர்வதேச நீதிமன்றம் 2016 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆனால் அந்தத் தீர்ப்பை சினா இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்தத் தீர்ப்பின் பின்னணியிலேதான் பிலிப்பைன்ஸ் நாட்டுடன் அமெரிக்கா பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றையும் செய்திருந்தது. இதனாலேயே இராணுவத்தை அனுப்புவோம் என்ற எச்சரிக்கையை அன்டனி பிளின் விடுத்திருந்தாகக் கருத முடியும்.
இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் முயற்சியில், சீனா ஈடுபட்டுள்ளதென அமெரிக்க, இந்திய ஊடகங்கள் தொடர்ச்சியாக் குற்றம் சுமத்துகின்றன.
இந்த இடத்திலேதான் இலங்கை புதிய தந்திரோபாயங்களை வகித்திருக்கிறது.
ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த நியாயங்களை சா்வதேச அரங்கில் இருந்து தட்டிக்கழிக்க அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகளின் ஒத்துழைப்பை இலங்கை 1983 ஆம் ஆண்டில் இருந்து 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை பெற்றிருந்தது. தற்போது இந்தோ- பசுபிக் பாதுகாப்பு விவகாரத்தை மையப்படுத்தி அமெரிக்காவையும் சீனாவையும் வெவ்வேறாகவும் சமாந்தரமாகவும் இலங்கை கையாண்டு வருகின்றது. இதற்கு இலங்கையின் சமீபத்திய நகர்வு ஒன்றை உதாரணமாக அவதானிக்க முடியும்
அதாவது இலங்கை மற்றும் சீனா இராணுவத்தின் ஒருமித்த கூட்டுச் செயற்பாடுகள் உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான அனைத்து துறைகளிலும் நடைமுறை ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இலங்கையும் சீனாவும் உறுதிபூண்டுள்ளதாக சீன அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் சின்ஹவா தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் சீன மாநில ஆலோசகரும் தேசிய பாதுகாப்பு அமைச்சருமான வீ பெங்கை சந்தித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் நேரடியாகவே உறுதியளித்தாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருக்கிறது.
ஆனால் இது குறித்து இலங்கை அதிகாரபூர்வமாக இலங்கை ஊடகங்களுக்கு இன்றுவரை அறிவிக்காத நிலையில், சீன அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சின்ஹவா பகிரங்கப்படுத்தியுள்ளது.
சீனா- தெற்கு நாடுகளின் வறுமை ஒழிப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு மையத்தை அமைப்பது குறித்தும் இருவருடனும் வீ பெங் பேசியதாகவும் அதற்கு இலங்கை உடன்பட்டதெனவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருக்கிறது.
இதன் பின்னணியிலேயே கடந்த மே மாதம் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த பசில் ராஜபக்ச இலங்கையில் அமெரிக்கவையும் சமாளித்து அதன் நலன்களுக்குச் சாதகமான விவகாரங்கள் குறித்தும் பேசியிருக்கிறார். இதனைத் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் நாசூக்காக வெளிப்படுத்தியிருக்கிறது.
கோட்டாபயவை ஜனாதிபதியாக்குதற்குப் பாடுபட்ட அமைப்புகளில் ஒன்றான இந்த இயக்கம், தற்போது அமெரிக்க இலங்கை உறவு பற்றியும் அதன் ஆபத்துகள் குறித்தும் கடந்த செவ்வாய்க்கிழமை நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
சீனாவோடு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வரும் இலங்கை அரசு அமெரிக்காவுக்கும் இலங்கையில் கால்பதிக்க இடமளிக்கின்றது என்ற குற்றச் சாட்டை அந்த இயக்கம் முன்வைத்திருந்தது. திருகோணமலைத் துறைமுகத்தை ஐந்து ஆண்டுகளுக்கு மூவாயிரம் மில்லியன் டொலர்களுக்குக் குத்தகைக்கு வழங்க இலங்கை இணங்கியிருப்பதாகத் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் அறிக்கை கூறுகின்றது. கோட்டாபய ராஜபக்சவோடு முரண்பட்டுள்ள நிலையில் இந்த உண்மைகள் வெளிவருகின்றன.
ஆனால் வடக்குக் கிழக்கில் உள்ள ஈழத்தமிழர்களுக்குச் சொந்தமான கடற் பிரதேசங்கள், வளங்கள் போன்றவற்றை அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்குக் குத்தகைக்குக் கையளிக்கச் சிங்கள ஆட்சியாளர்கள் முற்படுவதை தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கண்டிக்க முற்படுகின்றமை சிங்கள பௌத்த தேசிய நலன்சார்ந்தது. அது ஈழத்தமிழர் நலன் சார்ந்ததல்ல.
வடமாகாணக் கடற் பிரதேசங்களையும் திருகோணமலைத்துறை முகத்தையும் அமெரிக்கா. இந்தியா போன்ற நாடுகளிடம் கையளித்து, வேண்டுமானால் சீனாவுக்கும் அங்கு சலுகைகளை வழங்குவதன் மூலம், ஈழத்தமிழர்களின் தமிழ்த்தேசியக் கோட்பாட்டை உடைப்பதே கோட்டாபய, ரணில் விக்கிரமசிங்க போன்ற சிங்கள ஆட்சியாளர்களின் நோக்கம். ஆகவே சிங்கள ஆட்சியாளர்களின் இந்த நோக்கமும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் போன்ற சிங்கள அமைப்புகளின் எதிர்ப்பும் வெவ்வேறு கோணத்தில் இருந்தாலும், ஈழத்தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை சிதைப்பது என்ற அடிப்படைச் சிந்தனை ஒன்றுதான்.
கொழும்பும் மற்றும் அம்பாந்தோட்டை போன்ற சிங்களப் பிரதேசங்களில் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுக்குக் குத்தகைக்கு வழங்குவதும். இலங்கைத் தீவின் முதலீட்டுக்கு இந்தியா போன்ற நாடுகளுக்கு இடமளிப்பதும் இலங்கைத் தீவின் இறைமைக்கு உட்பட்டது. சிங்களவர்களின் பொருளாதார நலன்களுக்கும் வேலை வாய்ப்புகளுக்கும் ஏற்ற முறையிலும் அது அமைந்திருக்கும்.
ஆனால் தமிழர் பிரதேசங்களில் இவ்வாறான நோக்கில் சிங்கள ஆட்சியாளர்கள் கருதவில்லை. நிலத் தொடர்பைப் பிரித்துத் தாயகக் கோட்பாட்டை உடைத்தல் என்ற இலங்கை ஒற்றையாட்சியின் சிந்தனைகளை உள்வாங்கியே அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளும் வடக்குக் கிழக்கில் தங்கள் புவிசார் நலன்களை நிறைவேற்றுகின்றன.
இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.
அமெரிக்க நடட்பு நாடுகளையும் இணைத்துக் கொண்டு ஆசியான் நாடுகளை உள்ளடக்கிய பிராந்தியப் பொருளாதாரக் கட்டமைப்பு ஒப்பந்தம் (Regional Comprehensive Economic Partnership- RCEP) ஒன்றை சீனா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் செய்திருந்தது. இதன் மூலம் கொழும்பு போட் சிற்றியில் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முதலீட்டாளர்களையும் இலங்கை வரவழைக்கக் கூடிய சூழல் உண்டு. ஆகவே இவ்வாறான புவிசார் மற்றும் பூகோள அரசியல் செயற்பாடுகள் எல்லாமே ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த பேச்சுக்களைச் சர்வதேச அரங்கில் இருந்து முற்றாகவே நீக்கம் செய்ய சிங்கள ஆட்சியாளர்களுக்கு வசதியாக அமைந்துள்ளன.
-அ.நிக்ஸன்