அமெரிக்கா தடைக்கு எதிராக முதல் முறையாக தடுப்பு உத்தரவை பிறப்பித்த சீனா
ஈரானிய எண்ணெயைக் கொள்முதல் செய்ததற்காக ஐந்து நிறுவனங்கள் மீது அமெரிக்கா விதித்த தடைகளுக்கு எதிராக, சீனா வர்த்தக அமைச்சகம் தடுப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது.
அமெரிக்காவிற்கு எதிரான வர்த்தகப் பதற்றங்கள் பெருமளவில் அதிகரித்துள்ள நிலையில், இந்த உத்தரவு வெளிவந்துள்ளது.
ஈரானிய எண்ணெயின் முக்கிய வாடிக்கையாளரான சீனா, இஸ்லாமியக் குடியரசிலிருந்து தள்ளுபடி விலையில் கிடைக்கும் கச்சா எண்ணெயை, முக்கியமாக சுதந்திரமான டீபாட் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் நம்பியுள்ளது.
சுத்திகரிப்பு நிலையங்கள்
இதன்படி மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்கா அத்தகைய சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தடைகளை விதித்து, ஈரான் மீதான தனது பொருளாதார அழுத்தத்தை அதிகரித்திருந்தது.

கடந்த ஆண்டு முதல் தனியாக அறிவிக்கப்பட்ட தடைகள் தொடர்பான சீன வர்த்தக அமைச்சகத்தின் உத்தரவின்படி, அமெரிக்காவின் நடவடிக்கைகள் அங்கீகரிக்கப்படவோ, செயல்படுத்தப்படவோ, அல்லது பின்பற்றப்படவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடைகள் சீன நிறுவனங்கள் மூன்றாம் நாடுகளுடன் இயல்பான பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதை முறையற்ற வகையில் தடை செய்கின்றன அல்லது கட்டுப்படுத்துகின்றன.
சர்வதேச சட்டம்
மேலும் சர்வதேசச் சட்டத்தையும், சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை நெறிமுறைகளையும் மீறுகின்றன என்று அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.

இதன்படி ஐ.நா.வின் அங்கீகாரமும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையும் இல்லாத ஒருதலைப்பட்சமான தடைகளை சீன அரசாங்கம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது, என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தத் தடை உத்தரவு, ஷான்டாங் மாகாணத்தைச் சேர்ந்த ஷான்டாங் ஜின்செங் பெட்ரோகெமிக்கல் குரூப், ஷான்டாங் ஷௌகுவாங் லுகிங் பெட்ரோகெமிக்கல் மற்றும் ஷான்டாங் ஷெங்சிங் கெமிக்கல் ஆகிய மூன்று நிறுவனங்களுக்குப் பொருந்தும்.
மேலும், சீனாவின் பிற பகுதிகளில் அமைந்துள்ள ஹெங்லி பெட்ரோகெமிக்கல் (டாலியன்) சுத்திகரிப்பு ஆலை மற்றும் ஹெபே சின்ஹாய் கெமிக்கல் குரூப் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என்றும் சீனா விளக்கியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |