மேற்கு உலகுக்கு எதிராக சீனா திடீர் பரப்புரை
அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு எதிரான வன்மத்தை சிறிலங்காவில் வாழும் உள்ளூர் மக்கள் மத்தியில் தூண்டும் நடவடிக்கையை சீனா மேற்கொண்டுள்ளதாக கரிசனை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் சிறிலங்காவில் உள்ள சீனத் தூதரகம் இன்று உள்ளூர் நாளிதழில் வெளியிடப்பட்ட கட்டண விளம்பரத்தில் அமெரிக்காவை கடுமையாகச் சாடியுள்ளது.
சீனா மற்றும் சிறிலங்காவிற்கு அழைப்பு விடுக்கப்படாத ஜனநாயகத்திற்கான மெய்நிகர் உச்சி மாநாட்டை இலக்கு வைத்து இந்தப் பணம் செலுத்திய விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பை மையமாக கொண்டு வெளியாகும் ஆங்கில நாளிதளில் அமெரிக்காவை கடுமையாக விமர்சித்து, சீனா கட்டணம் செலுத்திய விளம்பரம் ஒன்றை பிரசுரித்துள்ளது.
ஜனநாயக அமைப்பில் கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் பிரச்சினைக்குரிய நடைமுறைகளை அமெரிக்கா கொண்டிருப்பதாக அதில் சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், மாலத்தீவு மற்றும் நேபாளம் ஆகியவை தெற்காசிய நாடுகளில் ஜனநாயகத்திற்கான உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளன.
எனினும் சிறிலங்காவுடன் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளை இந்த உச்சி மாநாட்டிற்கு அமெரிக்காவின் ஜோ பைடனின் நிர்வாகம் அழைக்காத நிலையில், இந்த விளம்பரம் வெளியாகியுள்ளது.
உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்ட 110 நாடுகளில் தாய்வான், பிலிப்பைன்ஸ் மற்றும் மெக்சிகோ ஆகியவை அடங்கும் என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட பங்கேற்கும் நாடுகளின் பட்டியல் மூலம் தெரியவந்துள்ளது.
அதிபர் ஜோ பைடன் தலைமையில் இன்றும் நாளையும் நடைபெறும் ஜனநாயகத்திற்கான உச்சி மாநாட்டில் உலகளாவிய ரீதியில் உள்ள அரசாங்கங்கள், குடிசார் சமூகங்கள் மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஜனநாயகம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தனிநபர் மற்றும் கூட்டு அர்ப்பணிப்புகள், சீர்திருத்தங்கள் மற்றும் முயற்சிகளை அறிவிப்பதற்கான தளமாக இந்த மாநாடு அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.