சீனா இலங்கையின் நட்பு நாடுதான் - சாணக்கியனுக்கு பதிலடி
இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க சர்வதேச நிதி நிறுவனங்கள் உதவிகளை வழங்க வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதான பங்குதாரர் என்ற வகையில், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களை உடனடியாக இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு சீனா வலியுறுத்தி வருவதாக இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
சீனா இலங்கையின் உண்மையான நண்பன் அல்ல எனவும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் நண்பன் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு இலங்கையில் உள்ள சீன தூதரகம் நேற்று டுவிட்டரில் பதிலளித்துள்ளது.
டுவிட்டரில் பதில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்து தவறு என்பதை சீன தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளதோடு, கொவிட் தொற்று காலப்பகுதியில் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் மட்டக்களப்பு மாவட்டம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் சீனா பெருமளவு உதவிகளை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
அத்துடன் இலங்கையின் கடனை மறுசீரமைக்கும் முயற்சியில் கடன் வழங்குநர்களுடன் முன்னெடுக்கப்பட்ட அனைத்து கூட்டங்களிலும் சீனா பங்கேற்றதாக தூதரகம் கூறியுள்ளது.
இலங்கைக்கு உதவ சீனாவின் நிதி நிறுவனங்கள் கடந்த ஏப்ரல் மாதம் நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியை தாமதமின்றி தொடர்பு கொண்டதாகவும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
பல்வேறு வங்கிகளின் பணிக்குழுக்கள் இலங்கைக்கு விஜயம் செய்து வருவதாகவும், இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும் இலங்கையில் உள்ள சீன தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.