சிறிலங்காவுக்கு சீனா மரண அடி!! பொறுப்புக் கூறவேண்டியவர்கள் எங்கே?
சிறிலங்கா அரசாங்கம் கொள்வனவு செய்யாத ஒரு பொருளுக்கு பணம் செலுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் (S.M Marikkar) தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கத்தின் இவ்வாறான தவறான தீர்மானங்களுக்கு காரணமான அனைவருக்கும் எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“சீனாவின் கழிவு உரக்கப்பலுக்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தவுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். எங்கே இந்த மஹிந்தானந்த என்று எனக்கு கேட்க தோன்றுகின்றது.
சீனா இந்த அரசாங்கத்தின் கழுத்தைப் பிடித்து சுவரில் அடித்து தான் இந்தப் பணத்தை பெற்றுள்ளார்கள். வாங்காத ஒரு பொருளுக்கு நாம் ஏன் பணம் செலுத்த வேண்டும் என்பதே எனது முதல் கேள்வி.
இதற்கு பொறுப்புக் கூறவேண்டிய மஹிந்தானந்த, சஷீந்திர என்ன செய்கின்றார்கள்? வாங்காத பொருளுக்கு பணம் செலுத்த வேண்டுமென்றால் கொள்வனவு செய்த பத்திரத்தில் ஏதோ தவறு உள்ளதாக உணர்கிறேன்.
நாம் தெளிவாக ஒன்றை கூறிக்கொள்கின்றோம். அடுத்து வருவது ரணில் விக்ரமசிங்க போன்று டீல் அரசாங்கம் அல்ல.
சட்டத்தை சரியாக, நேர்த்தியாக, கடுமையாக நடைமுறைப்படுத்தும் ஒரு அரசாங்கமே என்றார்.